இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களுக்குப் பிறகு மருத்துவ பணியாளர் ஒருவர் தனது குழந்தைகளை சந்தித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர் சுசி வாகன் (43). இவருக்கு ஹெட்டி(7), பெல்லா(9) என்ற இரு மகள்கள் உள்ளனர். கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒன்பது வாரங்களாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்ததால் அவரது குழந்தைகள் சுசியின் தங்கை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஒன்பது வாரங்களுக்குப் பிறகு சுசி அண்மையில் வீடு திரும்பினார்.
தான் வீடு திரும்பப் போவதை மகள்களுக்குச் சொல்லாத சுசி, அவர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில், குழந்தைகள் லேப்டாப்பில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னால் சென்று நின்றார். தாய் பின்னால் இருப்பதை அறியாத குழந்தை சாதாரணமாக நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். எதேர்ச்சையாக திரும்பிய பெல்லா, பின்னால் தாய் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். அதன் பின்னர் ஹெட்டியும் தாயைப் பார்க்க இருவரும் தாயை கட்டியணைத்து கதறி அழுதனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.