தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த விமானப்பயணிகள் 477 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் கொரோனாவுக்கான அறிகுறி கண்டறியப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கொரோனாவை தடுக்க தமிழக விமான நிலையங்களில் 2-ஆவது நாளாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட 12 நாடுகள் மட்டுமின்றி மேலும் சில நாடுகளுக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவியுள்ளது. தென்னாப்ரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகள் உட்பட மொத்தம் 38 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். குறைந்த நேரத்தில் முடிவு கிடைக்கக்கூடிய ரேபிட் பரிசோதனைக்கான கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 3,400ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கான கட்டணம் 900 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவு கிடைக்க 6 மணிநேரம் வரை ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அறிகுறி இருப்பவர்களை உடனே தனிமைப்படுத்த விமான நிலையத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒமைக்ரான் வகை கொரோனாவை தடுப்பது குறித்து மதுரை விமான நிலையத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை பற்றி பேசிய அமைச்சர், நேற்று இரவுவரை விமானப் பயணிகள் 477 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை எனவும் கூறினார். மரபணு சோதனையை மேற்கொள்ளும் ஆய்வகம் தமிழகத்திலேயே உள்ளதாகக் தெரிவித்த அமைச்சர், விமானப் பயணிகளிடம் கொரோனா கண்டறியப்பட்டால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படும் எனக்கூறினார்.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையிலேயே ஒமைக்ரான் பாதிப்பை கண்டறியமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தடுப்பூசி போடுவதில் மதுரை மாவட்டம் மோசமான நிலையில் உள்ளதாகவும், இதனால் மதுரை மக்கள் தயவுகூர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஊரடங்கு நிலை வராமல் இருக்க முகக்கவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com