இந்தியாவில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்து வரும் நபர்களின் விகிதமானது 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனாத்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 10 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகளை இந்தியா மேற்கொண்டுள்ள நிலையில், இங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் விகிதமானது 90 சதவீதத்திற்கும் மேல் அதிகமாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கையானது உலக அளவில் இந்தியாவில் அதிகமாகியுள்ளதாக மத்திய சுகாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறும் போது “ துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் தற்போது இந்தியாவில் கொரோனாத் தொற்றிலிருந்து மீளும் நபர்களின் விகிதமானது 90.62 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பரவிலின் விகிதமானது தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 5700 நபர்கள் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகின்றனர். மற்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. முன்னதாக 57 நாட்களுக்கு பத்து லட்சம் மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது 13 நாட்களுக்கு பத்து லட்சம் மக்கள் கொரோனாவிலிருந்து குணமாகி வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 37,000 கீழான நபர்களே கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நல்ல முன்னேற்றம்” என்றார். மாநிலங்கள் அளவிலான கொரோனாத்தொற்றில் 10 மாவட்டங்களை அட்டவணைப்படுத்திய அவர் அதில் மஹாராஷ்டிராவில் கொரோனாத்தொற்று பரவல் மற்றும் இறப்பு அதிகமாக இருப்பதை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார்.