தமிழ்நாட்டில் கடந்த இரு வாரத்தில் இரட்டிப்பான ஐ.சி.யூ. நோயாளிகள் எண்ணிக்கை
தமிழகத்தில் ஐ.சி.யு.வில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு வாரத்தில் இரட்டிப்பாகி உள்ளது என்றும், அதே போன்று ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில் ஐசியுவில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, சேலம், மதுரை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலேயே ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அதிகம் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி கணக்குப்படி, மொத்தம் 8,340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் 366 கொரோனா நோயாளிகள் ஐ சியுவில் இருந்தனர். ஜனவரி 17ந் தேதியன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 1,52,348 ஆக உயர்ந்துள்ளது. இதில் 814 பேர் ஐசியு வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள 9829 ஐ சி யு படுக்கைகளில் 8.2% படுக்கைகள் தற்போது உபயோகத்தில் உள்ளன. இதில் சென்னையில் தான் அதிக நோயாளிகள் உள்ளனர். 814 பேரில் 291 பேர் சென்னையில் சிகிச்சைப் பெறுகின்றனர். கோவையில் 72 பேர், சேலத்தில் 68 பேர் வேலூரில் 51 பேர், மதுரையில் 49 பேர் உள்ளனர்.
இதே போன்று ஜனவரி 1ம் தேதி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோர் எண்ணிக்கை 1392 ஆக இருந்தது. ஜனவரி 17ம் தேதி கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்து 4013 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள 40757 ஆக்சிஜன் படுக்கைகளில் 9.8% தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் சென்னையில் 1407 பேர், கோவையில் 499 பேர், மதுரையில் 291 பேர், வேலூரில் 193 பேர், சேலத்தில் 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆக்சிஜன் நோயாளிகள் முதல் ஐந்து மாவட்டங்கள்: சென்னை (565), கோவை (212), ஈரோடு (95), மதுரை (49), தஞ்சாவூர் (49)
ஐசியு நோயாளிகள் முதல் ஐந்து மாவட்டங்கள்: சென்னை (82), கோவை (62), ஈரோடு (51), சேலம் (30), தஞ்சாவூர் (13)
ஆக்சிஜன் நோயாளிகள் முதல் ஐந்து மாவட்டங்கள்: சென்னை (1407), கோவை (499), மதுரை (291), வேலூர் (193), சேலம் (149)
ஐ சி யு நோயாளிகள் முதல் ஐந்து மாவட்டங்கள்: சென்னை (291), கோவை (72), சேலம் (68), வேலூர் (51), மதுரை (49)
தமிழ்நாட்டில் ஜனவரி 17ம் தேதி நிலவரம்: ஆக்சிஜன் படுக்கைகள் - 40,757; ஆக்சிஜன் நோயாளிகள் - 4,013 (9.8%); ஐ சி யு படுக்கைகள் - 9,829; ஐ சி யு நோயாளிகள் -814 (8.28%)
தமிழ்நாட்டில் ஜனவரி 1ம் தேதி நிலவரம்: ஆக்சிஜன் படுக்கை நோயாளிகள் - 1392; ஆக்சிஜன் இல்லா நோயாளிகள் - 1,391; ஐ சி யு நோயாளிகள் - 366
- சுகன்யா
தொடர்புடைய செய்தி: கொரோனா பரிசோதனையை மாநில அரசுகள் குறைக்க வேண்டாம் - மத்திய அரசு கடிதம்