வாடகை வேண்டாம்; மூன்று வேளை உணவு தருகிறேன் - ஊரடங்கில் மனித நேயம் காத்த காவலர்

வாடகை வேண்டாம்; மூன்று வேளை உணவு தருகிறேன் - ஊரடங்கில் மனித நேயம் காத்த காவலர்
வாடகை வேண்டாம்;  மூன்று வேளை உணவு தருகிறேன் - ஊரடங்கில் மனித நேயம் காத்த காவலர்

தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வடமாநிலத் தொழிலாளர்களிடம் மூன்று மாத வாடகை வாங்காமல், மூன்று வேளை உணவளித்து, தன் செலவிலேயே அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த காவல் அதிகாரியின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊர்க்காவல் படை வீரர் ரஞ்சித்குமார். கடந்த 9 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் இவர் சென்னை திருவான்மியூர் எல்பி ரோட்டில் தனக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டு வளாகத்தில் இருந்த 2 அறைகளை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 5 பேருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் சென்னையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து தொழிலாளர்கள் 5 பேரும் வேலை இல்லாமல் உணவின்றி தவித்து வந்தனர்.

அவர்களைக் கண்டு மனம் இறங்கிய ரஞ்சித்குமார் அவர்களுக்கு தனது சொந்த செலவிலேயே 3 வேளை உணவளித்து கவனித்து வந்தார். கடந்த 3 மாதங்களாக வீட்டு வாடகையும் வாங்கவில்லை. இதனிடையே தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை தான் பணிபுரியும் மயிலாப்பூர் போலீஸ் நிலைத்தின் உதவியுடன் அவர்களது சொந்த ஊரான பீகாருக்கு ரயிலில் அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அத்தோடு நிற்கவில்லை, அவர்கள் கிளம்பிச் செல்லும் போது ஐந்து பேருக்கும் 1 மாதத்துக்கு வேண்டிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் மற்றும் பணம் ரூ.7,500 யையும் கையில் கொடுத்து வழியனுப்பியுள்ளார். ரஞ்சித்குமாரை கைகூப்பி கண்ணீருடன் நன்றி தெரிவித்தபடி அவர்கள் ரயில் ஏறி சென்றனர்.

இது குறித்து மனித நேயமிக்க காவலர் ரஞ்சித்குமார் கூறும் போது “"எனது வீட்டுக்கு வாடகைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்பட்டதால் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். அவர்கள் எனது வீட்டை வாடகைக்கு கேட்டப்போது கூட நான் அவர்களிடம் முன்பணமாக ஒரு மாத வாடகையை மட்டுமே வாங்கியிருந்தேன். அதனையும் அவர்கள் ஒரு மாத வாடகையில் கழித்துக் கொண்டனர்.

அவர்கள் தினக்கூலி ஊழியர்கள்தானே. பாவம், திடீரென நிகழ்ந்த இந்த நிகழ்வால் அவர்கள் எங்கே செல்வார்கள். நான் ஊர்க்காவல் படையில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பணிபுரிந்து வருகிறேன். மேலும் தனியாக செக்யூரிட்டி நிறுவனமும் நடத்தி வருகிறேன்.

அதில் வந்த வருமானத்தை கொண்டு அவர்களுக்கு உதவி செய்தேன். ஊரில் எனக்கு விவசாய தொழில் உள்ளது. அதில் இருந்து வந்த அரிசி, பருப்பு போன்றவற்றை அவர்களுக்கு கொடுத்து உதவினேன். என் தாய் கன்னியம்மா அவர்களுக்கு தன்னால் முடிந்தவரை 3 வேளையும் சமைத்து சாப்பாடு கொடுத்தார்கள். இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்’’எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com