"இன்று நள்ளிரவு முதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு" பிரதமர் மோடி அறிவிப்பு
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்,
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி " ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. சமூக விலகல் தவிர்க்க முடியாதது. குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை பேச வந்திருக்கிறேன். மக்கள் ஊரடங்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மக்களுக்கு நன்றி" என்றார்.
மேலும் தொடர்ந்த மோடி " கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகலே வைரஸ் பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது. கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றிரவு முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களை குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது." என்றார்.