கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21,304 ஆக அதிகரிப்பு !
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21304ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இத்தாலியில் மட்டும் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஸ்பெயினில் இதுவரை 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகிவிட்டனர். இவ்விரண்டு எண்ணிக்கையும் சீனாவில் ஏற்பட்ட 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாகும்.
இதற்கு அடுத்தபடியாக ஈரானில் சுமார் 2 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஆயிரத்து 300 பேரும் கொரோனாவால் மடிந்துள்ளனர். அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரிட்டனில் 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.