"கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்யுங்கள்"- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை ரத்துசெய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் கடந்த ஜனவரி 21 முதல் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம், சராசரி எண்ணிக்கை 50,476 - 27,409 என்பதுவரை குறைந்துவிட்டது. கொரோனாவின் இந்த பரவும் விகிதம் உலகளவிலும், இந்திய அளவிலும் மாற்றமடைந்து வருவதை தொடர்ந்து, தற்போது அமலிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இப்போது ஆலோசிக்க இருக்கிறோம்.
ஒரு சில மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் கொரோனா உச்சத்தை தொட்டதை தொடர்ந்து, கடுமையான சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. குறிப்பாக மாநில எல்லைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அங்கும் கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கூடுதல் கட்டுப்பாடுகளால் மக்களின் நடமாட்டம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தடைபடக்கூடாது. தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்து திருத்தங்கள் அல்லது ரத்து செய்தால் பயனுள்ளதாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.