தமிழகத்தில் இன்று ஒரேநாளில் இணை நோய்கள் இல்லாத 34 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 790 சிறார்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்ப் பரவல் மிக வேகமாக உள்ளது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேர் உட்பட 21 ஆயிரத்து 228 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 790 சிறார்கள் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரையிலான கொரோனா பாதிப்பு 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 19 ஆயிரத்து 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11 லட்சத்து 9 ஆயிரத்து 450 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 144 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 228 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 608 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 509 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 152 பேரும், மதுரை மாவட்டத்தில் 787 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 747 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று ஒரேநாளில் இணைநோய்கள் இல்லாத 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில் 50 வயதுக்கு உட்பட்ட 28 பேர். அதில் மதுரையைச் சேர்ந்த 25 வயது பெண், திண்டுக்கல்லைச் சேர்ந்த 36 வயது ஆண், சேலத்தைச் சேர்ந்த 36 வயது பெண், செங்கல்பட்டைச் சேர்ந்த 37 வயது பெண், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 35 வயது ஆண், கடலூரைச் சேர்ந்த 31 வயது ஆண், சென்னையைச் சேர்ந்த 38 வயது ஆண் போன்ற மிகக்குறைந்த வயதினரும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.