கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 125 பயணிகளில் 13 பயணிகள் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு 179 பயணிகளுடன் சர்வதேச சார்ட்டர்டு விமானம் நேற்று வந்தது. விமான நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் 125 பயணிகளில் 13 பயணிகள் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துஅமிர்தசரஸ் துணை ஆணையர் குர்பிரீத் சிங் கெஹ்ரா கூறுகையில், ''தப்பிச் சென்ற 13 பயணிகளின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கப் போகிறோம். திரும்பி வராதவர்களின் புகைப்படங்கள் நாளிதழில் வெளியிடப்படும். அவர்கள் மீது தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். நோயாளிகளின் அலட்சியத்தை பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று அவர் கூறினார்.