அதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம் வரும் 1.50 லட்சம் பிசிஆர் கிட்!
(கோப்பு புகைப்படம்)
கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் திங்களன்று தமிழகம் வருகிறது.
தமிழகத்தில் நாள்தோறும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை பிசிஆர் கிட்கள் மூலமாக இதுவரை 3,85,185 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் கருவிகளை உலகின் பல்வேறு நிறுவனத்திடம் வாங்க நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த வகையில் முதற்கட்டமாக தென்கொரிய நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் பிசிஆர் கிட்கள் கடந்த 17-ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தது. தொடர்ச்சியாக 1 லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் மும்பை வந்துள்ளது. இந்த கருவிகள் திங்கட்கிழமை தமிழகம் வர உள்ளது.
இதனைத்தொடர்ந்து, வரும் வாரங்களில் வாரத்திற்கு ஒரு முறை 1 லட்சம் பிசிஆர் கிட் வீதம் மீதமுள்ள 7.50 லட்சம் பிசிஆர் கிட்கள் வர இருப்பதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் 41 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 26 தனியார் பரிசோதனைக் மையங்கள் என 67 பரிசோதனை மையங்களிலும் பரிசோதனை செய்யும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.