எனக்கு ஜூவாலாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும்: விஷ்ணு விஷால்!
‘’எனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினி நட்ராஜை கடந்த ஆண்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த விஷ்ணு விஷால், பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி புகைப்படங்களை ட்விட்டரில் திங்கட்கிழமை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து விஷ்ணு, ஜூவாலாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதற்காகத் தான் மனைவியை அவர் பிரிந்தார் என்றும் செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில், ’எனக்கு ஜுவாலாவை பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். எனக்கு ஜுவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர் களுடன் சேர்ந்து நேரத்தைச் செலவிடுவோம். எங்கள் நட்பு அதை தாண்டி அடுத்தக் கடத்துக்குச் செல்லுமா என்பதை இப்போது சொல்ல இயலாது. நாங்கள் அவரவர் வேலைகளில் பிசியாக இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.