பழமைகளை எதற்கு படமாக்க வேண்டும்? PS-1 புரோமோஷனில் அசத்தலாக பதிலளித்த விக்ரம்!

பழமைகளை எதற்கு படமாக்க வேண்டும்? PS-1 புரோமோஷனில் அசத்தலாக பதிலளித்த விக்ரம்!
பழமைகளை எதற்கு படமாக்க வேண்டும்? PS-1  புரோமோஷனில் அசத்தலாக பதிலளித்த விக்ரம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பழைய கதைகளை எதற்கு படமாக எடுக்க வேண்டும் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் விக்ரம் பதிலளித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக செப் 20 முதல் 26 வரை ப்ரமோஷன் கேம்பைன் பல நகரங்களுக்கும் சென்று நடத்தி வருகிறது படக்குழு. 20ஆம் தேதி, 22ஆம் தேதி பெங்களூரிலும், 24ஆம் தேதி ஹைதராபாத்திலும் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டை நடத்தினார்கள். நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தது படக்குழு. இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்டனர்.

நேற்று மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது "நாம் எப்போதும் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் இருப்பவர்கள். அப்படியான சூழலில் ஒரு வரலாற்றுக் கதையை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அதில் என்ன இருக்கிறது?" என ஒரு செய்தியாளர் கேட்டார்.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த விக்ரம் "இன்று நாம் பிரமீட்களைப் பார்க்கிறோம். அதை எப்படி கட்டியிருப்பார்கள் என ஆச்சர்யப்படுகிறோம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா இந்தியாவில் மிக உயரமான கோபுரத்தைக் கொண்ட கோவிலாக தஞ்சைப் பெரிய கோவில் உள்ளது. நாம் எகிப்தில் உள்ள பிரமீடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான்.

சோழர்கள் காலத்தில் அந்த கோவில் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் அந்த கோவிலை கட்டினார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் அதுதான். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. நமக்கும் பிரமீடுகள் பற்றியும் பைசா கோபுரம் பற்றியும் தெரிகிறது. ஒழுங்காக நிற்காத பைசா கோபுரத்தை நாம் பார்த்து வியப்படைகிறோம், பாராட்டுகிறோம். அதனுடன் செல்ஃபியெல்லாம் எடுக்க விரும்புகிறோம்.

ஆனால் இன்றளவும் உறுதியாக நிற்கும் பழங்கால கோவில்கள் நம் நாட்டில் உள்ளது. தஞ்சை கோவில் பிளாஸ்டர்கள் எதுவும் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது. அந்த காலத்தில் எந்தவித இயந்திரங்களும் இல்லாத நிலையிலும் யானைகள், காளைகள் மற்றும் மனிதர்களின் உதவியுடன் மட்டுமே தஞ்சை கோவிலை கட்டி உள்ளார்கள். பிளாஸ்டர்கள் பயன்படுத்தாமல் கட்டப்படுள்ள அந்த கோவில் 6 பூகம்பங்களை தாங்கி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா.

அது எப்படி சாத்தியமானது என்றால், அந்த கோவில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அதுமட்டுமின்றி ராஜராஜ சோழன், அவரது ஆட்சி காலத்தில் 5 ஆயிரம் அணைகளை கட்டி உள்ளார். அந்த காலத்திலேயே நீர் மேலாண்மை ஆணையத்தையும் அவர் வைத்திருந்தார்.

அந்த காலத்தில் பெரும்பாலான ஊர்களுக்கு ஆண்களின் பெயர்களை மட்டும் சூட்டி வந்த நிலையில், பெண்களின் பெயரை சூட்டி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார் ராஜ ராஜ சோழன். இலவசமாக மருத்துவமனைகளை கட்டியுள்ளார். இதெல்லாம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இவையெல்லாம் 9-ம் நூற்றாண்டில் நடந்தவை. இதற்கு 500 ஆண்டுகள் பிறகு தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார்.

இதன்மூலம் நாம் எந்த அளவுக்கு பெருமைமிகு கலாச்சாரத்தை கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்து பார்க்கவே வியப்பாக உள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பார்க்க வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள். அதனால் நாம் இவர்களையெல்லாம் கொண்டாட வேண்டும்” என கூறினார்.
விக்ரமின் இந்தப் பேச்சைக் கேட்டு ஆச்சர்யப்பட்டனர் பத்திரிகையாளர்கள். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

-ஜான்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com