‘துள்ளுவதோ இளமை’ அபிநய் காலமானார்..
உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த 'துள்ளுவதோ இளமை' அபிநய் இன்று காலை 4 மணியளவில் காலமானார்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமான அவர் ஜங்ஷன், சிங்கார சென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்த அபிநய், அப்படங்கள் பெரிதாக கவனம் ஈர்க்காத நிலையில், குணசித்திர கதாப்பாத்திரங்களில் நடித்தார்.
துள்ளுவதோ இளமை தனுஷ்க்கு பெரிய அளவிலான கேரியரை அமைத்துக்கொடுத்த நிலையில் அபிநய்க்கு அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பின், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் சேர்ந்து, பிரபல இயக்குனர் ஃபாசில் இயக்கிய Kaiyethum Doorath என்ற படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்திலும் அபிநய் அறிமுகமானார். அவரது மலையாள திரை வாழ்க்கையும் பெரிய அள்விலான வெற்றியாக அமையவில்லை.
பின், தாஸ், ஆறுமுகம், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட திரைப்படங்களில் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் செயல்பட்டிருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், 'துப்பாக்கி', 'அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடிகர் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்தது பெரிய அளவில் கவனம் பெற்றது.
இந்நிலையில்தான் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அபிநய் இன்று காலை 4 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 44 என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

