’தேர்தல் பின்னணியில் ஒரு கதை எழுதியிருந்தோம்' : கேவி ஆனந்த் குறித்து கபிலன் வைரமுத்து
”கடந்த ஓராண்டு காலமாக விவாதித்து, ‘தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை’ எழுதியிருந்தோம். தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை தொடங்கியிருந்த நிலையில் இந்த பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது” என்று மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து.
”இன்று அதிகாலை இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து மனம் உடைந்திருக்கும் அவரது எத்தனையோ ரசிகர்களில் நானும் ஒருவன். அவரோடு பாடலாசிரியராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவரோடு பயணித்த ஒவ்வொரு நாளும் ஒரு கல்வி நாளாகவே இருந்தது. ஒரு கதைக்கான களத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அதற்குள் அவர் நிகழ்த்தும் தேடல் அபாரமானது. உண்மையானது.
திரைக்கதை உருவாக்கத்தில் அவர் செலுத்திய உழைப்பு இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு இன்றியமையாத பாடம். கடந்த ஓராண்டு காலமாக விவாதித்து, ‘தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை’ எழுதியிருந்தோம். கோ, கவண் போன்ற படங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வைப் போல இந்தப் படமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று உறுதியாக அவர் நம்பினார். பட உருவாக்கத்திற்காக அவர் தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை தொடங்கியிருந்த நிலையில் இந்த பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது.
ஒரு சிறந்த இயக்குனரை - ஒப்பற்ற சிந்தனையாளரை - ஒப்பனையற்ற மனிதரை இழந்துவிட்டோம். அவருடைய திரைப்படங்களால் அவர் நம்மோடு வாழ்ந்திருப்பார். என்னைப் பொறுத்தவரையில் அவர் இறக்கவில்லை. எனக்குள் ஒரு புன்னகையாகவே புதைந்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.