கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டுவோம்: விஷால் உறுதி
கந்துவட்டி கும்பலுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என நடிகர் சங்க செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார்.
அசோக்குமாரின் தற்கொலை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் அசோக்குமார் உயிரிழந்தார் என்பதை அறிந்து கடும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கந்துவட்டி திரைத்துறையிலும் உயிர் பலிவாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருப்பதாவும் அவர் கூறியுள்ளார். விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என உறுதி அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கந்துவட்டி கொடுமைக்கு அசோக்குமாரின் உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கந்துவட்டிக் கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், இணை தயாரிப்பாளரான அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.