'விருந்து சாப்பாடு சாப்பிட தான் முதல் முதலில் புதுச்சேரிக்கு வந்தேன்'-விஜய்சேதுபதி பேச்சு

'விருந்து சாப்பாடு சாப்பிட தான் முதல் முதலில் புதுச்சேரிக்கு வந்தேன்'-விஜய்சேதுபதி பேச்சு
'விருந்து சாப்பாடு சாப்பிட தான் முதல் முதலில் புதுச்சேரிக்கு வந்தேன்'-விஜய்சேதுபதி பேச்சு

விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக புதுச்சேரியில் நடைபெற்றது, திரைப்படம் வரும் மே 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாமனிதன், இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இப்படத்திற்கு இசையமைக்க, தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே சுரேஷ் இந்த படத்தை வெளியிடுகிறார்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரி 100அடி சாலையில் உள்ள தனியார் கலை அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, இயக்குநர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகரும் வெளியிட்டாளருமான ஆர்.கே சுரேஷ், கவிஞர் பா.விஜய், இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் புதுச்சேரி முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பத் ஆகியோர் பங்கேற்று திரைப்படத்தின் இசை தகட்டை வெளியிட்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் பா.விஜய் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளன்தான் மொழிக்கு மீசை முளைக்க வைத்தவன். அவன் பாரதிதாசன் என்றும் பெருமையுடன் பேசினார், அந்த மாமனிதன் பிறந்த மாநிலத்தில் இநத மாமனிதனின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார், உலகிலேயே ஒரு ஆணுடைய முத்தத்தை ஒரு ஆண் விரும்புகிறான் என்றால் அது விஜய்சேதுபதியின் முத்தம் தான் என பா.விஜய் பேசியது அரங்கை அதிர செய்தது, தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் பா.விஜய் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களை பார்த்து ஐ லவ் யூ என கூறி தனது பேச்சை ஆரம்பித்தார், புதுச்சேரிக்கு என பலருக்கு பல நினைவுகள் இருந்தாலும் நான் திருமணமாகி விருந்து சாப்பாடு சாப்பிட தான் முதல் முதலில் புதுச்சேரிக்கு வந்தேன், பல்வேறு படப்பிடிப்புகளுக்கு புதுச்சேரி வந்துள்ளதாக தெரிவித்த அவர் தற்போது மாமனிதன் படத்தின் இசை வெளியீட்டை புதுச்சேரியில் நடத்துவது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி பேசிய அவர் இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா என இருவரும் இப்படத்திற்கு இசை அமைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்றும் இதற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார், மேலும் தான் இசைஞானி இளையராஜாவின் மிக தீவிரமான, வெறித்தனமான ஒரு ரசிகன் எனவும் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.

இந்த மாமனிதன் திரைப்படம் வருகின்ற மே மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com