விஜய் படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது? - லோகேஷ் கனகராஜ் விளக்கம்
விஜய் படத்தின் வாய்ப்பு எப்படி வந்தது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. அதுவும் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்த அதே தனியார் நட்சத்திர விடுதியில்தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். ஒரே வரிசையில் மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு ஆகிய மூவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
விழாவிற்கு வந்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபாவை மேடைக்கு அழைத்தனர். அப்போது சந்திரசேகரை சில வார்த்தைகள் பேச சொன்ன போது அவர் ‘என்னால் பேச முடியவில்லை. அதிக மகிழ்ச்சியில் இருக்கும் போது வார்த்தைகள் வராது என்பார்கள். அது இப்போது நடந்துள்ளது’ என்றார். மேலும் அவரது தாய் ஷோபாவை ஒரு பாடலை பாட சொன்னார்கள் அவர் மறுத்துவிட்டார். விஜய் மாஸ்டர் படத்தில் ஆங்கிலத்தில் பாடியுள்ள பாடல் தனக்குப் பிடித்துள்ளதாக கூறினார்.
இதற்குப் பிறகு நடிகர் ஷாந்தணு பாக்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர், படம் குறித்தும் விஜய் குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஷாந்தணு பேசும் போது, “கிட்டத்தட்ட 10 வருஷமா நடித்துக் கொண்டிருக்கிறேன். சில படங்கள் வெற்றியானது. சில படங்கள் தோல்வியை சந்தித்தன. அதை வைத்து பலர் என்ன என்னவோ பேசினார்கள். எனக்கு மட்டும் இல்லை பலருக்கும் இது நடந்திருக்கும். ஆகவே இதுதான் என் முதல் படம். விஜய் அண்ணாவுடன் ஒரு படம் பண்றேன். என்ன லைஃப் நல்லா வரணும்” என்றார்.
அதன்பின் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேடையேறினார். அவர் பேசும் போது, “கதையை சொல்லவேயில்லை, உடனே வந்து நடிக்கிறேன் என்றார் விஜய்சேதுபதி. கைதி ஷூட்டிங் போது இந்த வாய்ப்பு வந்தது. நான் போய் விஜய்க்கு கதை சொன்னேன். ‘கைதி’ படப்பிடிப்பு முடிவதற்குள் ‘மாஸ்டர்’ ஓகே ஆகிவிட்டது.
இந்தப் படத்தில் ‘வாத்தி’ என்றுதான் நண்பர்களிடம் தலைப்பு வைத்துள்ளதாக சொல்லி வைத்திருந்தேன். அதன் பிறகுதான் ‘மாஸ்டர்’ என்ற உண்மையை வெளிப்படுத்தினேன். இதில் எல்லா பாடல்களும் சூழலுக்கு தேவையான பாடல்களாகதான் இருக்கும். 129 நாள் எந்த இடைவெளியும் இல்லாமல் ஷூட்டிங் செய்வது சும்மா இல்லை. அது என்னுடைய உதவி இயக்குநர்களால் தான் நடந்தது. கதையை மீறி எந்த விஷயமும் போகக்கூடாது என்று யோசித்துதான் போஸ்டரை முடிவு செய்தோம். அதையேதான் போஸ்டராக வெளியிட்டோம்” என்றார்.