‘மாஸ்டர்’ இசை வெளியீட்டில் அம்மா ஆசையை நிறைவேற்றிய விஜய்
மாஸ்டர் படத்தில் அம்மாவின் ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றிய கொடுத்தார்.
விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. அதுவும் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்த அதே தனியார் நட்சத்திர விடுதியில்தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். ஒரே வரிசையில் மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு ஆகிய மூவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
விழாவிற்கு வந்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபாவை மேடைக்கு அழைத்தனர். அப்போது சந்திரசேகரை சில வார்த்தைகள் பேச சொன்ன போது அவர் ‘என்னால் பேச முடியவில்லை. அதிக மகிழ்ச்சியில் இருக்கும் போது வார்த்தைகள் வராது என்பார்கள். அது இப்போது நடந்துள்ளது’ என்றார். மேலும் அவரது தாய் ஷோபாவை ஒரு பாடலை பாட சொன்னார்கள் அவர் மறுத்துவிட்டார். விஜய் மாஸ்டர் படத்தில் ஆங்கிலத்தில் பாடியுள்ள பாடல் தனக்குப் பிடித்துள்ளதாக கூறினார்.
ஒரு தாயாக நீங்கள் இந்த மேடையில் விஜயிடம் கேட்க விரும்புவது என்ன என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் மிக எளிமையான ஆசையை வெளிப்படுத்தினார். என் மகன் என்னை கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக மேடைக்கு விரைந்தார் விஜய். அம்மாவைக் கட்டிப்பிடித்து அன்பு செலுத்தினார். அப்பா சந்திரசேகரையும் கட்டித் தழுவினார். அந்த நிமிடம் மேடை உணர்வுப்பூர்வமாக நிரம்பி வழிந்தது.