‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!
‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் -  உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

விஜய் நடிப்பில் வரும் அக் 25-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘பிகில்’. நயன்தாரா, விவேக், யோகிபாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 

குறிப்பாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சமூக வலைத்தளங்களில் படம் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து வந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிகில்’ படம் தொடர்பான தகவல்களை விஜய் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். 

அதில் ‘பிகில்’ படத்திற்கான டிக்கெட்கள் இன்று மாலையிலிருந்து புக் செய்யப்படும் என்றும் படத்திற்கான ப்ரோமோ காட்சிகள் இன்று மாலையே வெளியிடப்படும் என்றும் கூறினார். மேலும் படத்திற்கான தீம் இசையை வெளியிடுவீர்களா என்று கேட்டதற்கு, அப்படி எந்தவிதமான தீம் இசையையும் வெளியிடப்படமாட்டாது என்றும் படத்தில் ஆங்காங்கே இடம் பெறும் தீம் இசை நிச்சயமாக உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்றும் கூறினார். 

மேலும் தியேட்டர்களில் காலை 1 மணி காட்சிகள் இருக்குமா என்று கேட்டதற்கு அதை தியேட்டர் உரிமையாளர்களே முடிவு செய்வார்கள் என்றும் 4000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பிகில்’ படம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும் தெலுங்கு ரசிகர்களுக்காக ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டதற்கு ‘பிகில்’ படம் வெறித்தனமாக இருக்கும் என்றும் தீபாவளி மற்றும் சில காரணங்களால் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே டப் செய்யப்படுகின்றது என்றும் கூறினார். 

இது மட்டுமல்லாமல் ட்ரெய்லரில் இடம் பெற்ற காட்சிகளில் கிராபிக்ஸ் சிறப்பாக இல்லையே என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ட்ரெய்லரை விட தியேட்டரில் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமாதமானதாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாவதை எப்படி தடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு அதற்காக பிரேத்யக முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், உண்மையில் விஜய் எத்தனை நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று கேட்டதற்கு மொத்தமாக 198 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும், அதில் விஜய்க்கு தேவையான 150 நாட்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் கூறினார். 

இது மட்டுமல்லாமல் படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறதே என்று கேட்டதற்கு இது கால்பந்தை மையப்படுத்திய படம் என்பதால் அந்த நீளம் தேவைப்பட்டது என்றும் இந்தப் படத்தின் மூலம் கால்பந்தாட்டம் தனி கவனம் பெறும் என்றும் கூறினார். மேலும் பாடலாசிரியர் விவேக் பற்றி கேட்டதற்கு, சிங்கப் பெண் மற்றும் மாதரே பாடல்கள் மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் என்று கூறினார்.

அஜித்துடன் இணைய வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டதற்கு அதற்கான சரியான கதை, நேரம் வரும் போது நிச்சயம் அது நடக்கும் என்று கூறினார். இதுமட்டுமல்லாமல் படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனை வெளியீடுவீர்களா என்று கேட்டதற்கு அதற்கான யோசனைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இறுதியாக படம் பார்க்கும் ரசிகர்கள், படம் பார்க்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com