‘நடிகர்களை மட்டுமில்ல... இயக்குநர்களையும் அப்படி கூப்பிடாதீங்க’ - இயக்குநர் வெற்றிமாறன்

‘நடிகர்களை மட்டுமில்ல... இயக்குநர்களையும் அப்படி கூப்பிடாதீங்க’ - இயக்குநர் வெற்றிமாறன்
‘நடிகர்களை மட்டுமில்ல... இயக்குநர்களையும் அப்படி கூப்பிடாதீங்க’ - இயக்குநர் வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை பாகம்-1’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்பட படக்குழு பங்கேற்றனர்.

விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “ ‘விடுதலை’ படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். அவரை சந்தித்து பேசும்போது, கதையை கேட்டார். அவருக்காக 45 நிமிடங்கள் படமாக்கி காட்டினேன். அதைப்பார்த்து வழி நெடுக காட்டுமல்லி பாடலை எழுதினார். என் உணர்வு வார்த்தையாக மாறி ஒலியாக மாறி வந்தது. அவருடைய அனுபவங்களை என்னோடு அவர் பகிர்ந்து கொண்டதெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. நாம் அனைவரும் அவரின் பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் தான்” என்றார். தொடர்ந்து பேசும்போது (தலைவா என ரசிகர்கள் கூச்சலிட), “சினிமா நடிகர்களை தலைவா என்று கூறுவது ஏற்புடையது அல்ல... அதுபோல இயக்குநர்களுக்கும் ஏற்புடையது அல்ல” என்றார் வெற்றிமாறன்.

பின் படம் குறித்து பேசுகையில், “இந்தப் படம் முழுக்க, அனைத்து விஷயங்களிலும் மிகப்பெரிய சவால்கள் எனக்கு இருந்தன. அதை ஏற்றுக்கொண்ட படக்குழுவின் அனைவருக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக இப்படம் உடல்ரீதியாக சூரிக்கு மிகப்பெரிய Challenge. க்ளைமாக்ஸ் படமாக்கப்படும்‌ போது, சூரிக்கு அடிகூடபட்டது. அவ்வளவு Dedication-உடன் நடித்தார் அவர். 

மட்டுமன்றி எனக்கு ரொம்ப கோவம் வரும். அதை பொறுத்துக்கொண்ட உதவி இயக்குநர்களிடம் நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தை 4 கோடி பட்ஜெட்டில் முடிக்க நினைத்தேன். ஆனால் நினைத்ததை விட பட்ஜெட் எகிறி விட்டது. இதில் வேலை பார்ப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை செய்துமுடித்துள்ளோம். இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை பாரதிராஜா தான் செய்ய வேண்டியதாக இருந்தது. அதன் பின் இந்த கதாபாத்திரத்துக்காக எனக்கு தோன்றியது விஜய் சேதுபதிதான். முதலில் படப்பிடிப்பில் எப்படி எடுப்பதென்று எனக்கும் தெரியவில்லை. அதனால் அன்றைய நாட்கள் எனக்கும் Audition மாதிரி தான் இருந்தது. 8 நாள் என ஆரம்பித்தது 65 நாள் விஜய் சேதுபதியை வைத்து படமாக்கினோம்.

முதல் பாகத்தை விட 2-ம் பாகத்தில் தான் அவருக்கான காட்சிகள் அதிகம் வருகிறது. இன்று இருக்கும் நடிகர்களுக்கு ஒரு Role model விஜய் சேதுபதி. Comfort zone-இல் பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ படம் ஒரு Challenging தான். இப்போது வரைக்கும் இந்த படம்‌ வந்ததற்கு காரணம், என்னுடன்‌ இருக்கும் படக்குழு தான். ‘விடுதலை’ படத்துக்கு பின் ‘வாடிவாசல்’ திரைப்படமும், ‘வாடிவாசலுக்கு’ பின் ‘வடசென்னை-2’ தொடங்கப்படும்” என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com