`வெண்ணிலா கபடி குழு’ நடிகர் மாயி சுந்தர் உடல்நலக் குறைவால் காலமானார்!

`வெண்ணிலா கபடி குழு’ நடிகர் மாயி சுந்தர் உடல்நலக் குறைவால் காலமானார்!
`வெண்ணிலா கபடி குழு’ நடிகர் மாயி சுந்தர் உடல்நலக் குறைவால் காலமானார்!

மன்னார் குடியைச் சேர்ந்த ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் துணை நடிகர் மாயி சுந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கீழப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் மாயி சுந்தர். இவருக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை உள்ளனர். 51 வயதான சுந்தர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் தந்தையருடன் மன்னார்குடியில் வசித்து வந்தார்.

சுந்தர், ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘மாயி’, ‘ரன்’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘மிளகாய்’. `குள்ளநரி கூட்டம்’ போன்ற இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ‘மாயி’ படத்தில் நடித்ததன் காரணமாக இவர் ‘மாயி’ சுந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மாயி சுந்தர் வீட்டில் இருந்தபடி மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவரது உடல் மன்னார்குடி கீழப் பாலத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 3-ம் தேதி ‘வெண்ணிலா கபடிக்குழு’ நடிகர் ஹரி வைரவன் காலமாகி இருந்த நிலையில் தற்போது அதே படத்தில் நடித்த மற்றொரு நடிகர் காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மாயி சுந்தருக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com