பெரியார் கருத்துகளை தாங்கிய தனது படத்தை வெளியிட ரஜினிகாந்த் உதவியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் மனம் திறந்து பேசியுள்ளார்.
பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதாக தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், ‘என் பேச்சு குறித்து மன்னிப்பு கேட்க முடியாது. இது மறுக்க வேண்டிய விஷயம் அல்ல; மறக்க வேண்டிய விஷயம்’ என்று கூறியிருந்தார்.
ரஜினிகாந்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ், ‘ரஜினிகாந்த் யார் மனமும் நோகும்படியாக பேசக் கூடியவர் அல்ல; அவரை திட்டுபவர்களைகூட பதிலுக்குப் பதில் திருப்பி திட்டாதவர். பெரியார் குறித்து அவர் அவதூறாகப் பேசிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால்2006-ஆம் ஆண்டு பெரியாரின் தீவிர தொண்டரான இயக்குநர் வேலு பிரபாகரன், பெரியார் கருத்துகளை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது பெரும் தொகை கொடுத்து வெளியிட ரஜினி உதவினார்’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் லாரன்ஸின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இயக்குநர் வேலு பிரபாகரன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘ரஜினிகாந்த் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். ஏன் படம் வெளிவரவில்லை என விசாரித்தார். உடனடியாக 5 லட்சம் ரூபாய் கொடுத்து படத்தை வெளியிடுமாறு கூறினார் என விளக்கம் அளித்துள்ளார். ஆகவே இதன் மூலம் ராகவா லாரன்ஸ் சொன்ன தகவல் உண்மைதான் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி உள்ளது.