ட்ராஃபிக் போலீஸ் விளம்பரத்தில் கண் அடித்த ப்ரியா வாரியர்
ட்ராஃபிக் போலீஸார் வைத்துள்ள விளம்பர பலகையில் ப்ரியார் வாரியரின் வைரல் போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
மலையாள ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’ பாடல் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் ப்ரியா வாரியர் எனும் நடிகை கண் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இணையத்தில் வெளியான வேகத்திலேயே இந்தப் பாடல் இந்திய அளவில் வைரலானது. ப்ரியா வாரியர் ஓவர் நைட்டில் மிகப் பெரிய பிரபலமாக உருமாறினார். அன்றிலிருந்து அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வதோதரா போக்குவரத்து காவல்துறையினர் ப்ரியா வாரியர் கண் அடிக்கும் புகைப்படத்தை தங்களின் விழிப்புணர்வு விளம்பரப் பலகையில் பயன்படுத்தி உள்ளனர். விபத்துக்களை தவிர்க்க வேண்டி பல்வேறு புதிய புதிய உத்திகளை கையாண்டு வரும் காவல்துறையினர் ப்ரியாவின் படத்தையும் விட்டு வைக்கவில்லை. விபத்து நேராமல் காத்துக் கொள்ள அறிவுறுத்தும் நோக்கில் இந்தப் புகைப்படத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தகவல் சமூக வலைத்தளவாசிகளுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே வதோதரா காவல்துறை சமந்தமான அந்த விளம்பரப் பலகை இணையத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
இன்று சென்னையில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர், எமதர்ம ராஜா வேடமிட்ட நபரை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.