சினிமா
90களின் பிற்பகுதியிலிருந்து கர்ணன்.. அதிருப்தி குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!
90களின் பிற்பகுதியிலிருந்து கர்ணன்.. அதிருப்தி குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!
'இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தில், 1997-ல் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கொடியன்குளம் கலவரம் நடந்ததாக காண்பிக்கப்படுகிறது எனவும், இது வரலாற்றை திரித்து கூறும் செயல் எனவும் சில விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளானது.
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியவற்றை கர்ணன் படக்குழு சரி செய்தது. படத்தில் குறிப்பிடப்பட்ட ஆண்டு 90-களின் பிற்பகுதியில் என்று மாற்றம் செய்யப்பட்டது. எனினும் 90-களின் பிற்பகுதியில் என திருத்தப்பட்டிருப்பதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
''கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.
படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்''. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

