இன்னும் சில நாட்களில் தனது 21-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த இந்தி நடிகை துனிஷா சர்மா, திடீரென்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி இன்ஸ்டாகிராம் போஸ்ட், மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் துனிஷா சர்மா. மகாராஷ்டிராவை சேர்ந்த 20 வயதான துனிஷா பல்வேறு பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தற்போது அவர் அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற டிவி தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இச்சூழலில் துனிஷா சர்மா நேற்று மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
படப்பிடிப்பின்போது மதிய உணவுக்கு இடைவெளி விடப்பட்டது. அந்த நேரத்தில் துனிஷா மேக்கப் அறைக்குச் சென்றார். நீண்டநேரமாகியும் அறையின் கதவு மூடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு நடிகை துனிஷா சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்ட படக்குழுவினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு துனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலைக்குக் காரணம் என்ன என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிரால் சிரித்த முகத்துடன் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டிருந்த துனிஷா சர்மா, "இந்த தருணத்தில், மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே வாழ்வில் போதும்'' எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு அடுத்தபடியாக, நேற்று தற்கொலை செயலுக்கு முன் ‘தங்கள் பேரார்வத்தால் உந்தப்படுபவர்கள், எந்த இடத்திலும் நின்றுபோக மாட்டார்கள்’ என நடிகை துனிஷா சர்மா கடைசியாக பதிவிட்ட பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வரும் ஜனவரி 4ஆம் தேதி தனது 21-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நடிகை துனிஷா படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.