தனது நாவலில் இருந்து கதையையும் வசனங்களையும் திருடிவிட்டதாக பெண் எழுத்தாளர் ஒருவர், பிரபாஸ் நடித்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பிரபாஸ், காஜல் அகர்வால், டாப்ஸி நடித்து வெளியான தெலுங்கு படம், ’மிஸ்டர் பெர்பக்ட்’. தில் ராஜூ தயாரித்திருந்த இந்தப் படத்தை தசரத் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதையும் வசனமும் தனது நாவலில் இருந்து திருடப்பட்டதாக சமலா ராணி என்ற எழுத்தாளர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். கோர்ட் கூறியபடி, இந்த வழக்கை மாதாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் தசரத் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமலா ராணி கூறும்போது, ‘எனது நாவல் 2010-ம் ஆண்டில் வெளியானது. அதற்கு முன்பாக, எனது கதையை சில இயக்குனர்களிடம் சொன்னேன். அவர்கள் அதை படமாக எடுக்க மறுத்துவிட்டனர். ஆனால், ’மிஸ்டர் பெர்பக்ட்’ படத்தில் சில காட்சிகளையும் வசனங்களையும் அப்படியே எடுத்து பயன்படுத்தியுள்ளனர். அதனால்தான் வழக்குத் தொடுத்தேன்’ என்றார்.