'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M

'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M
'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M

துக்க வீடுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகம் கதறி அழுது ஒப்பாரி வைப்பதைப் பார்க்கிறோம். அவர்களில் பலர் இறந்தவருக்கு நெருங்கியவராக இல்லாமலும் இருக்கலாம். அங்கு அழுகிற பெண்கள் அந்த இறப்புக்காக மட்டுமே அழுவதில்லை. அவர்கள் அழுவதற்கான காரணங்கள் கோடி. ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட ஏதோ ஒரு துக்கத்தை நினைத்து அழ துக்க வீடுகள் ஒரு களம். உண்மையில் துக்க வீடு, பெண்கள் தங்கள் பாரங்களை நினைத்து கூடி அழுது இளைப்பார ஒரு தற்காலிக கூரை அவ்வளவே. 

உலக வரலாற்றில் யுத்தங்களால் சிந்தப்பட்ட இரத்தத்துக்கு சமமாக பெண்களின் இரத்தமும், கண்ணீரும் சிந்தப்பட்டே இருக்கிறது, பெண்களுக்கு எதிரான அநீதி ஒரு புறம், பெண்கள் லெக்கின்ஸ் அணிவதால் தான் மழை பொய்க்கிறது, சமூக குற்றங்கள் நடக்கிறது என்பன போன்ற கருத்துகள் மறுபுறம் என பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி எழுதத் துவங்கினால் காகிதங்கள் தீராது. எனவே ஒரு சிறு தகவலோடு இந்த சர்வதேச திரைப்படத்துக்குள் நுழைவோம்.

”இந்தியாவில் 1921-ல் குழந்தைத் திருமண தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது,  இந்தியாவில் 10 வயதிற்குக் கீழ் சுமார் 2 லட்சம் பெண் குழந்தைகள் விதவைகளாக இருந்திருக்கின்றனர்.”

1986-ஆம் வருடம் James Caviezel எனும் பிரெஞ்சு-ஈரானிய பத்திரிகையாளர் ஈரானிய கிராமமான, Kupayeh-வை தனது காரில் கடக்கிறார். அங்கு அவரது கார் பழுதடைகிறது, காரை பழுது பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் Shohreh Aghdashloo  என்ற பெண் மூலம் அக்கிராமத்தில் சொராயா என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை பற்றி தெரியவருகிறது. பின்னர் இச்சம்பவம் James Caviezel மூலம் பத்திரிகைகளில் வெளி வந்து உலகையே உலுக்கியது. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உண்மை சினிமா தான்., The Stoning Of Soraya M (2008)

2008-ஆம் வருடம் வெளிவந்த பாரசீக மொழி திரைப்படம் ”தி ஸ்டோனிங் ஆஃப் சொராயா எம்”. இது ஈரானில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் சொராயா என்ற பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்தாரின் கொடுமையான தீர்ப்பு பற்றி பேசும் உண்மைக் கதை.

Kupayeh ஈரானில் உள்ள நாகரீகமற்ற தொலைதூர கிராமம். அங்கு சொராயா அவளது இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். சொராயாவின் கணவன் அலி ஒரு ஆணாதிக்க தடித்தனம் கொண்டவர். தன் மகன்களிடம் ”இது ஆண்களின் உலகம். நீங்கள் ஆண்பிள்ளைகள் உன் தாயே ஆனாலும் அவள் ஒரு பெண் அவளை மதிக்க வேண்டியதில்லை” என அச்சிறுவர்கள் மனதில் விஷம் விதைக்கிறார்.

உண்மையில் அலி நகரத்தில் உள்ள 14 வயது பெண் மெஹரியினை மணக்க வேண்டுமென ஆசைப் படுகிறார். அதற்காக தனது மனைவி சொராயாவை தலாக் (விவாகரத்து) செய்துவிட நினைக்கிறார். இதற்கு உதவுவதற்காக கிராம மதத்தலைவர் முல்லா ஹாசனை நாடுகிறார். முல்லா ஹாசனுக்கு சொராயாவை அடைய வேண்டுமென ஆசை இருந்தது. எனவே இவ்விசயத்தில் முல்லா ஹாசன், அலிக்கு முழு முனைப்பாக உதவுகிறார். தலாக் செய்வதற்கான நஷ்ட ஈடு எதையும் ஏற்றுக் கொண்டு விலக விரும்பாத சொராயா தன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலை கொள்கிறாள்.

இந்நிலையில் சொராயா மீது வீண் பழி சுமத்தி அவரை தண்டித்துவிடுவதன் மூலம் தான் நினைத்த பெண்ணை அடையமுடியும் என முடிவுக்கு வரும் அலி, ‘சொராயா ஒழுக்கம் இல்லாதவள்’ அவளுக்கு கிராமத்தில் வேறொரு ஆணுடன் தொடர்பு உண்டு என கட்டுக் கதை உருவாக்கி விடுகிறார்.

இதற்கு முல்லாவும் துணை போக, கிராம பஞ்சாயத்து கூடுகிறது. சொராயாவின் பெற்றோர் உட்பட இருதரப்பும் வாதாடினாலும் தீர்ப்பு என்னவோ கணவன் அலியின் பக்கமே சாதகமகிறது. ஒழுக்கம் இல்லாதவள் என குற்றம்சாட்டப்பட்ட சொராயாவை கிராம முறைப்படி தண்டிக்க முடிவு செய்யப்படுகிறது.  ஒரு மனிதனின் இடுப்பு உயரமளவிற்கு குழியொன்று வெட்டப்பட்டு அதில் சொராயா உள் நிறுத்தப்படுகிறார். அவளது கைகள் பின் புறமாக கட்டப்படுகின்றன. அவள் தண்டணையின்போது தப்பி ஓடாமல் இருக்க அவளது இடுப்பு வரை மண் கொண்டு மூடப்படுகிறது. பிறகு கிராமத்தார் ஒவ்வொருவராக தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். ஆம் சொராயா மீது கிராமத்தார் ஒவ்வொருவரும் கல்லெறிகிறார்கள். இக்காட்சியைக் காண நமக்கு தனிமிருகத்தனம் வேண்டும். அத்தனை தத்ரூபமாக படமாக்கப்பட்ட இக்காட்சியை இளகிய குணம் கொண்டவர்களால் காண இயலாது. சொராயா துரோகத்தின் கற்களால் அடித்துக் கொல்லப்படுகிறார்.

அவள் மீது கல்லெறிவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயம் ஊர் பெண்கள் அவளை கடைசியாக ஒரு முறை வந்து பார்த்து வருத்தம் தெரிவித்துச் செல்கிறார்கள். அவள் “எனக்கு சாகப் போவது பற்றி கூட பயமில்லை, ஆனால் ஒருவர் பின் ஒருவராக என் மீது கல் எறியப்போகும் வலியை நினைத்தால்…….” என  குமுறி அழுகிறாள்.

ஆனால் பயனில்லை. அது ஆண்களின் கிராமம் அங்கு ஆண்களின் வல்லாட்சி நடக்கிறது. தண்டனை நிறைவேற்றப்பட்ட மறுநாள் கிராமம் வழக்கம் போல் இயங்குகிறது. என்பதை காட்சிப்படுத்திய வகையில் இயக்குநர் Cyrum Nowrasteh இது அக்கிராமத்தில் முதன் முதலாக நடக்கும் நிகழ்வல்ல என நமக்கு புரியவைக்கிறார்.

Ghent International Film Festival 2009,Los Angeles Film Festival 2009,Satellite Awards 2009,Toronto International Film Festival 2008 என பல்வேறு சர்வதேச விருதுகளை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

சர்வதேச கவனத்தை ஈர்த்த சொராயா மானுட்செரியின் 9 வயது புகைப்படம் மட்டுமே நமக்குக் கிடைத்தது. பெண்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத ஆண்களின் இயலாமை தானே இப்படியான சம்பவங்களின் தொடர்ச்சி.

வீடியோ :

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com