எனிமி திரைப்படத்தை தயாரிப்பாளர் நினைத்திருந்தால் ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டு லாபம் பார்த்திருக்கலாம். ஆனால் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் எனிமி. இந்தப் படத்தை வினோத் என்பவர் தயாரித்துள்ளார். இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, கருணாகரன் கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய நடிகர் ஆர்யா, "அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். சண்டைக்காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விஷால், “எனிமி திரைப்படத்தை நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட்டு பெரும் லாபம் எடுத்து இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். எனவே திரையரங்கில் தான் வெளியிடுவேன் என உறுதியாக காத்திருந்தார். எனிமி திரைப்படம் சிறப்பான முறையில் உருவாகியுள்ளது. இயக்குனர் திரை வாழ்வில் மட்டுமல்லாமல் என்னுடைய திரை வாழ்விலும் எனிமி சிறந்த படமாக இருக்கும்.
படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ள சாம்.சி.எஸ் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.