நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்

நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்
நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் வழக்கை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 11ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதில், தன்னை பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், பிறகு தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என தான் குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியுள்ளார். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் மனுவில் இருவரும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என புகார்தாரரான விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com