ஜாமீனில் வெளிவந்த பிறகு சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ‘ஹம் சாத் சாத் ஹே’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது, அங்குள்ள காட்டில் வேட்டைக்குச் சென்றதாகவும், இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் உட்பட 7 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
இந்த நிலையில் விசாரணை முடிவடைந்து கடந்த 5-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி எனவும், வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி உட்பட 5 பேர் விடுவிக்கபடுவதாக அறிவித்ததோடு, சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அன்றே சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அவர் ஜாமீனில் வெளி வந்த பிறகு தனது முதல் பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் “உங்களின் ஆனந்தக் கண்ணீருக்கு நன்றி. எனது அன்புக்குரிய நீங்கள் எல்லோரும் பக்கபலமாக இருந்தீர்கள். தொடக்கம் முதலே ஆதரவு அளித்த, அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.