"டென்ட் கொட்டகை சினிமாதான் என் இன்றைய நிலைக்குக் காரணம்": இயக்குநர் கே. வி. ஆனந்த்

"டென்ட் கொட்டகை சினிமாதான் என் இன்றைய நிலைக்குக் காரணம்": இயக்குநர் கே. வி. ஆனந்த்
"டென்ட் கொட்டகை சினிமாதான் என் இன்றைய நிலைக்குக் காரணம்": இயக்குநர் கே. வி. ஆனந்த்

ஒவ்வொருவரின் பால்யம், இளமைப்பருவம் என மனித வாழ்வின் எல்லா பருவ நிலைகளிலும் தியேட்டரில் சென்று படம் பார்த்த அனுபவங்கள் தனித்துவமானவை. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தியேட்டர் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

"நான் பள்ளியில் படிக்கும்போது, பழவேற்காட்டில் உள்ள பாட்டி வீட்டுக்கு மாதத்தில் மூன்று அல்லது நான்கு முறை சென்றுவிடுவேன். ஏனெனில் அங்குள்ள ஹரி டென்ட் கொட்டகையில் படம் பார்ப்பதை மிகவும் விரும்புவேன். ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை படங்களை மாற்றிவிடுவார்கள். பத்து நாட்களில் நான் மூன்று அல்லது நான்கு படங்களைப் பார்த்துவிடுவேன். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தைப் பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஆனால் சில குடும்பப் படங்கள் சலிப்பாக இருந்ததைக் கண்டிருக்கிறேன்.

16 வயதினிலே... 

16 வயதினிலே, தில்லானா மோகனாம்பாள் படங்களை டென்ட் கொட்டகையில் பார்த்து ரசித்திருக்கிறேன். அப்போது நான் ஏழு மற்றும் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்ததாக நினைக்கிறேன். இந்தப் படங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பின்னர் ஜெய்சங்கர் எனக்குப் பிடித்த ஹீரோவாக இருந்தார். 1976 -81 காலக்கட்டத்தில் அவருடைய எல்லா படங்களையும் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன்.

தில்லானா மோகனாம்பாள் 

என்னுடைய அயன் படத்தில் ஒரு காட்சியில் ஜெய்சங்கர் பற்றி குறிப்பு இருக்கும். சூர்யாவிடம் ஜெகன் பேசுவார். ஆனால் என் உதவி இயக்குநர்கள் யாரும் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. அதில் ஒருவர் கேட்டார் "சார், கோபிச்சுக்காதீங்க, ஜெய்சங்கர் யார் சார்?” அப்போது நான் கஷ்டப்பட்டேன். என் ஆறு உதவியாளர்களில் இருவருக்கு மட்டுமே ஜெய்சங்கர் யார் என்பது தெரிந்தது. என் தாத்தாவின் அம்மா, 80 வயது அவருக்கு. ஹரி தியேட்டரில் பார்த்த படங்களின் கதைகளை சொல்லச் சொல்லி என்னிடம் கேட்பார்.

கதையைவிட, நான் சொல்வதைக் கேட்பதில் அலாதிப் பரியம் அவருக்கு. ஜெய்சங்கர் படங்களின் கதைகளை அப்படியே அவரிடம் விவரிப்பேன். பழவேற்காட்டில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம், காலையிலேயே எழுந்துபோய் சுவரில் ஒட்டப்படும் இன்று முதல் போஸ்டர்களைப் பார்ப்பேன். ஜெய்சங்கர் அல்லது எம்ஜிஆரின் புதிய படங்கள் என்ன என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பேன். என் அப்பாவும் அம்மாவும் வேறு ஊர்களில் வேலைபார்த்தார்கள். தாத்தாவின் நண்பர்தான் எனக்குத் துணையாக தியேட்டருக்கு வருவார். 

ஜெய்சங்கர் 

அவர் தூங்கிக்கொண்டிருப்பார். நான் படம் பார்ப்பேன். நான் டென்ட் கொட்டகையில் பார்த்த படங்கள், அதைப் பற்றி பாட்டியிடம் விவரித்த பொழுதுகள்தான் இன்றைய என் நிலைக்குக் காரணமாக இருக்கின்றன என நினைக்கிறேன். கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மிகப்பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. விரைவில் மாற்றம் வரும். பொழுதுபோக்கு தேவைப்படும்போது, மீண்டும் மக்கள் தியேட்டர்களை நோக்கி வருவார்கள்" என்று உற்சாகத்துடன் நினைவுகூர்ந்துள்ளார் கே. வி. ஆனந்த்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com