’ஹீரோ டூ வில்லன்’ பன்முகத்தன்மையில் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா - பிறந்தநாள்..!

’ஹீரோ டூ வில்லன்’ பன்முகத்தன்மையில் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா - பிறந்தநாள்..!
’ஹீரோ டூ வில்லன்’  பன்முகத்தன்மையில் மிரட்டும்  எஸ்.ஜே.சூர்யா - பிறந்தநாள்..!

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா.  

‘வாலி, குஷி’ மாதிரியான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்த அவர் ‘நியூ, அன்பே ஆருயிரே... மான்ஸ்டர்’ உட்பட பல படங்களில் நடிகராகவும் தன்னை தகவமைத்துக் கொண்டு ஹீரோ, வில்லன், கவுரவ தோற்றம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதை கவர்பவர். அவருக்கு இன்று பிறந்த நாள்.

1966இல் அப்போதைய நெல்லை மாவட்டமான வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பிறந்தவர். அவரது பெயர் எஸ். ஜஸ்டின் செல்வராஜ். சினிமாவுக்காக எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். 

சென்னை லயோலோ கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்ற அவருக்கு சினிமாவில் நடிகராக வேண்டுமென ஆசை. அதற்காக பல முயற்சிகளை செய்த அவருக்கு இயக்குநர் பாக்கியராஜுக்கு உதவியாளராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு முன் வரை தனது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ள கிடைக்கின்ற வேலைகளை செய்துள்ளார் அவர்.

தொடர்ச்சியாக இயக்குநர்கள் வசந்த் மற்றும் சபாபதியிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அஜித் நடித்த உல்லாசம் படத்திலும் உதவி இயக்குநராக அவர் பயணியாற்றியுள்ளார். அந்த படத்தின் ஷுட்டிங்கின் போது தான் ‘வாலி’ படத்தின் கதையை சொல்லி, அதை அஜித்தை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பையும் பெற்றார். 

அந்த படத்தின் தயாரிப்பாளரை எஸ்.ஜே. சூர்யாவுக்கு அறிமுகம் செய்து  வைத்ததும் அஜித் தான். சிம்ரன், விவேக் என பலர் நடித்த இந்த படத்தில் ஜோதிகாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்ததும் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா தான். வாலி படம் வெளியான போது பத்திரிகையாளர்கள் ‘தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் படைப்பு’ என அதை மேற்கோள் காட்டி விமர்சனம் எழுதியிருந்தனர். 

வாலி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் தன் கம்பனிக்கு ஒரு படத்தை இயக்கும்படி எஸ்.ஜே. சூர்யாவை கமிட் செய்தார். அதன் மூலம் உருவானது தான் குஷி. விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வந்த இந்தப் படமும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு சக்ஸஸ் கொடுத்தது. 

தொடர்ந்து மாற்று மொழி படங்களை இயக்கிய அவர் ‘நியூ’ படத்தை முதலில் வேறொரு நடிகரை வைத்து தான் இயக்க முடிவு செய்து இருந்தார். ஏனோ அது கைக்கூடாமல் போக அந்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். அடல்ட் காமடி ஜானராக வெளிவந்த நியூ படமும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு வெற்றி கொடுத்தது. தொடர்ந்து அன்பே ஆருயிரே படத்தையும் இயக்கி, ஹீரோவாக நடித்தார். 

அதற்கடுத்து மற்ற இயக்குநர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். ஹீரோ, வில்லன், கவுரவ தோற்றம் என அவரது நடிப்பு தேடலுக்கு தீனி போட்டனர் சினிமா இயக்குநர்கள். ஸ்பைடர், மெர்சல் படங்களில் அவரது வில்லத்தனம் சூப்பராக இருக்கும். இறைவி, மான்ஸ்டர் படங்களிலும் நடிப்பில் அசத்தியிருப்பார்.  

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘தேவர்மகன்’ படத்தை பத்து முறை பார்த்து திரைக்கதை எப்படி எழுதுவது என்பதை தான் கற்றதாக அவரே தெரிவித்துள்ளார். 

‘நாம் எதைக் கொடுக்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும்’ என்பதை ஆழமாக நம்புபவர் எஸ்.ஜே.சூர்யா. 

‘வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை எதிர்த்து போராடினாலே வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்பது தான் அவரின் சக்ஸஸ் ரகசியம். 

ஹேப்பி பர்த்டே எஸ்.ஜே.சூர்யா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com