இயக்குநர் மகளுக்கு யோகிபாபு கல்வி உதவித்தொகை! | Yogi Babu | Suresh Sangaiah
யோகிபாபு நடிப்பில் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய படம் `கெணத்த காணோம்'. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்தநிகழ்வில் கலந்து கொண்ட யோகிபாபு, "சுரேஷ் சங்கையா எனக்கு 'காக்கா முட்டை' சமயத்திலிருந்து பழக்கம். அப்போதே எனக்கு `ஒரு கிடாயின் கருணைமனு' கதையைச் சொன்னார். ஆனால் அப்போது எனக்கு பயம், இப்போதுதான் காமெடியனாக சென்று கொண்டிருக்கிறோம். ஆனாலும் நல்ல கதை, ஒரு கதாபாத்திரத்தைச் சொல்லி அதில் நடிக்க அழைத்தார், அதிலும் நடிக்க முடியாமல் போனது.
இருந்தும் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படம் செய்ய விரும்பியது எனக்கு பெரிய பாக்கியம். இந்தப் படத்தை பெரிய அளவில் கொண்டு வந்தது சுரேஷ் சங்கையா. கேமராமேன் ஃபிரேம் வைக்கும் கேப்பில் வந்து, ’அண்ணே இன்னொரு கதை இருக்கு’ என்பார். அந்த 15 நிமிடங்களில் ஒரு கதை சொல்லி, ’அடுத்த படம் இதுதான் பண்றோம், தயாரிப்பாளரிடம் பேசுகிறேன்’ என்பார். நல்ல இயக்குநரை இழந்துவிட்டோம்.
நெல்சன் சார் பேசியபோது, நிறைய உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சொன்னார். ’நிறைய கொடுத்துக் கொண்டிருக்கிறேன்’ சார். சுரேஷ் சங்கையா உதவி இயக்குநர்களே ஐந்து பேர் என்னிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் நானும் லொள்ளு சபாவில் ராம் பாலா சாரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தவன்தான். அந்த கஷ்டம் என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். இங்கு வரும் முன்பு 3 பேரிடம் கதை கேட்டுவிட்டு தான் வந்தேன். பணம் முக்கியம் கிடையாது. இதே பரணி ஸ்டுடியோவில் 1 வசனம் பேச வாய்ப்பு கிடைக்குமா என மணிக்கணக்கில் நின்றிருக்கிறேன். நானே கதை எழுதி ஒரு உதவி இயக்குநருக்கு கொடுத்து தயாரிப்பாளரை பிடித்துக் கொடுத்து வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். யார் வேண்டுமானாலும் வாருங்கள், படம் செய்கிறேன்.
சுரேஷ் சங்கையா பொறுத்தவரை அவர் எங்கும் போகவில்லை நம்மோடு தான் இருக்கிறார். மகள் பிறந்த பின்னர் தான் அவர் காலமானார். அந்தக் குழந்தைக்கு என் பங்களிப்பாக ஒன்று செய்வேன் என முன்பு கூறி இருந்தேன். அதை இந்த மேடையிலேயே செய்துவிடுகிறேன்." எனக் கூறி ஒரு லட்ச ரூபாய் காசோலையை கொடுத்தார் யோகிபாபு.

