"100ஆவது படம் எடுக்க வேண்டும் என்ற அவரின் கனவு.." - கலங்கி பேசிய விக்ரமன் | R B Choudary | Vikraman
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி. சௌத்ரி (74), ராஜஸ்தானில் அதிர்ச்சிகரமான சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார். அவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்ரமன் தன்னுடைய இரங்கலை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
அந்தப் பதிவில், "40 வருடங்களுக்கு முன்பு எவ்வளவோ கனவுகளுடன், நாமும் ஓர் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்து, ரொம்பவும் கஷ்டப்பட்டு உதவி இயக்குநர், இணை இயக்குநர் பணிகள் செய்துவிட்டு இயக்குநர் ஆக முயற்சிக்கும்போது பல கம்பெனிகள் ஏறி இறங்கினேன். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு போராடிய நேரத்தில் சௌத்ரி சாரிடம் ஒரு கதை சொல்லி, அவரும் கதையைக் கேட்டதும் சம்மதம் சொல்லி ஆரம்பித்த படம்தான் ’புது வசந்தம்’.
என்னுடைய வீட்டுக்குப் பெயரே ’புது வசந்தம்’தான். இன்று நான் நிம்மதியாகச் சாப்பிடக் காரணம், அவர் போட்ட பிச்சை. அவர் இன்று இல்லை. எனக்கு மிகவும் கவலையான விஷயம் என்ன என்றால், 100ஆவது படம் எடுக்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறவில்லை. கண்டிப்பாக, சூப்பர் குட்டில் 100ஆவது படம் எடுப்பார்கள், ஆனால், அதைப் பார்க்க அவர் இல்லை. அது உண்மையிலேயே மிகவும் வேதனையாக இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

