தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் தான் தமிழ்நாட்டில் திரையரங்கங்கள் அப்படத்தை திரையிடவில்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கேரள பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் திட்டமிடப்பட்டு இணைக்கப்படுகின்றனர் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்தது. தமிழகத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ‘இப்படத்தை வெளியிடப்போவதில்லை’ என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இம்முடிவுகளுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 12-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மேற்கு வங்க மாநிலத்திற்கு நோட்டீஸ் பிறப்புத்ததோடு, இந்த திரைப்படம் குறித்து நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
அதன்கீழ் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் மொத்த 19 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது. மேலும் அந்த திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்க பொதுமக்கள் யாரும் விரும்பி செல்லவில்லை. அதனால் திரையரங்குகளில் அந்த படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை திரையிடுகிறார்கள். அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது” என தெரிவித்துள்ளது.