"அவர் பேசிய வார்த்தைகள் என்னை trigger செய்தது.." - சூர்யாவின் சினிமா பயணத்தை மாற்றிய விசயம்!
சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14 வெளியீட்டை முன்னிட்டு அவர் அளித்த பேட்டியில், தன் ஆரம்ப கால அனுபவம் எப்படி வாழ்க்கையை மாற்றியது என்பதை பகிர்ந்துள்ளார். ஒரு அமைச்சரின் கருத்து தன்னை ஆழமாக பாதித்து, தந்தை சிவக்குமாரின் நடிப்பு பாணியைத் தவிர்த்து, தனக்கென தனி பாதையை உருவாக்க வேண்டும் என்ற உறுதியை உருவாக்கியதாக சூர்யா கூறுகிறார்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் `விஸ்வநாத் & சன்ஸ்'. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷனல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆரம்ப காலத்தில் அவருக்கு நடந்த ஒரு சம்பவம் எப்படி அவரை பாதித்தது எனக் கூறியுள்ளார். அந்த பேட்டியில் "நான் நடிகர் ஆவேன் என நடிப்பதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரை எனக்கு தெரியாது. அப்பாவின் நடிப்பு திறமை என்பது எல்லோருக்கும் அறிந்ததே. அவர் எனக்கு நினைவாற்றலை அதிகப்படுத்த நிறைய பயிற்சிகள் கொடுத்திருக்கிறார். ஆனால் என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
என் நண்பர் ஒருவருடைய குடும்ப திருமணம். அவர் உறவினர்களில் ஒரு அமைச்சர் இருக்க, அவருக்கு பத்திரிக்கை கொடுக்க சென்றார். நானும் அவருடன் சென்றேன். அவரது வீட்டுக்கு சென்று பத்திரிகையை அளித்தோம். அந்த அமைச்சர் என்னை பற்றி விசாரித்தார். அதுதான் நான் நடிக்க துவங்கி இருந்த புதிது. `ஓ நீ பார்ப்பதற்கு சிவக்குமார் போலவே இருக்கிறாய், அவர் எப்படி நடிப்பாரோ அதே போல தான் நடிப்பாய் அல்லவா. நாங்கள் மீண்டும் அதையே பார்க்க வேண்டும். ஒரு விஷயம் தானே' என்பது போல சொன்னார்.
எனக்கு அது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அவர் சொன்ன வார்த்தைகள் என்னை trigger செய்தது. அதிலிருந்து நான் என்னுடைய அப்பா நடித்த படங்களை பார்ப்பதை நிறுத்திக் கொண்டேன். அவரது DNA தான் நானும். அவரை போல நான் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவரது பாவனைகளோ, குரல் பிரதிபலிப்போ எனக்கு வந்து விடக்கூடாது என மிக கவனமாக இருந்தேன். அவரது தாக்கம் என் நடிப்பில் வந்து விடக்கூடாது என உறுதியாக இருந்தேன். அப்போது எனக்கு 22, 23 வயது தான். இந்த சம்பவத்துக்கு பின் எனக்கு என ஒரு தனி பாதையை உருவாக்க துவங்கினேன்." என்றார்.

