"நல்ல படமாக மாறுவதும், மோசமான படமாக மாறுவதும் எடிட்டர் டேபிளில்தான்!" | SIFEA
தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் (SOUTHERN INDIA FILM EDITOR'S ASSOCIATION) 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வென்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் லிங்குசாமி, நித்திலன், கார்த்திக் சுப்புராஜ், எழில், தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன், கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தயாரிப்பாளர் தனஞ்செயன், “தேர்தலில் வெற்றியடைந்து பொறுப்பேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் உருவாகவில்லை. எடிட்டர்ஸ் டேபிளில்தான் உருவாகிறது. எடிட்டர்ஸ் ரெஸ்பான்ஸிபிளிட்டி பெரியது. அவர்கள் இல்லாமல் திரைப்படம் இல்லை. அப்படியானவர்கள் இங்கு முக்கியப் பொறுப்பில் இருக்கிறீர்கள். படத்தின் மீது தயாரிப்பாளருக்கு நம்பிக்கை வரவழைப்பதே எடிட்டர்தான். இதேபோல, நீங்கள் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும். ஸ்பாட் எடிட்டரோடுதான் படம் பண்ணுவேன் என எடிட்டர்ஸ் நீங்கள் படம் ஒப்புக்கொள்ளும்போதே சிபாரிசு வையுங்கள். ஏனென்றால், பேட்ச் வொர்க் மட்டுமே இப்போதெல்லாம் பல நாட்கள் எடுக்கிறது. படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. இதை எடிட்டர்ஸ் நீங்களும் புரிந்துகொண்டு சீரியஸாகச் செய்ய வேண்டும். படத்தின் எடிட்டரால் டீசர், ட்ரெய்லர் உருவாக்க முடியாதபோது இதற்காக வெளியில் ஒரு எடிட்டர் வேலைக்கு எடுக்கும்போது குறைந்தது ஒரு லட்சம், இரண்டு லட்சம் கேட்கிறார்கள். அவர்களால் ஒரு ட்ரெய்லர் சூப்பராக உருவாக்கும்போது உங்களால் ஏன் முடியாது? இதை நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். திரைப்படத்தின் மொத்த புரோமோஷன் வரையும் திரைப்படத்தின் எடிட்டர் நீங்கள்தான் பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்”.
இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்பராஜ், “மாநில விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். திரைப்பட உருவாக்கத்தில் எடிட்டிங் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு திரைப்படம் நல்ல படமாக மாறுவதும், மோசமான படமாக மாறுவதும் எடிட்டர் டேபிளில்தான். இயக்குநர் மேல் நம்பிக்கையும் ஸ்கிரிப்ட் நாலேஜூம் இருந்தால்தான் எடிட்டிங் சிறப்பாக வரும். நான் ஸ்கிரிப்ட்டில் எழுதியதைவிட, ஷூட் செய்ததை விடவும் எடிட்டர்ஸ் வேறொரு கோணத்தை எடிட்டிங்கில் கொடுத்திருக்கிறார்கள். எடிட்டருடன் அமர்ந்து வேலை பார்ப்பது நம் குழந்தையுடன் தனியாக நேரம் செலவிடுவதைப்போல. ஏனெனில், படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பாக இருப்போம். எடிட்டர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு பல காட்சிகள் எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் வாழ்த்துகள்”.
இயக்குநர் லிங்குசாமி, “இத்தனை நபர்களை கட்டுப்பாடோடு கொண்டுசெல்ல செல்வமணி போன்ற நபர் கிடைப்பது அபூர்வம். என்னுடைய படங்களில் பணிபுரிந்த அனைத்து எடிட்டர்ஸூக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எடிட்டிங் என்பது முக்கியமான இடம். தனஞ்செயன் சார் சொன்ன ஒரு விஷயத்தில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ‘சண்டக்கோழி’ படத்தின் எடிட்டர் சசி. ஆனால், அதன் ட்ரெய்லர் ஆண்டனிதான் கட் செய்து கொடுத்தார். அந்த ட்ரெய்லர்தான் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வியாபாரத்தையும் தொடங்கி வைத்தது. தகுதியான ஒருத்தர் எங்கே இருந்தாலும் சினிமாவிற்குள் சேர்த்துக் கொள்வதுதான் நம்முடைய வேலை. அதைப் பெரிய பிரச்னையாக பார்க்க வேண்டியதில்லை. ஈகோ இல்லாத தகுதியான நபர்கள் படத்திற்குள் வந்துவிட்டால் படம் பெரிய வெற்றி பெறும். அப்படியான எடிட்டர்ஸ் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி”.
இயக்குநர் சங்க செயலாளர், நடிகர் ஆர்.வி.உதயகுமார், “அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை எடிட்டர்களுடைய கஷ்டம் புரிந்து நாங்கள் எல்லோரும் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். இயக்குநர்கள்தான் முதல் எடிட்டர். உண்மையாக ஓர் இயக்குநர் படம் எடுத்தால் எடிட்டருக்கான வேலை மிகவும் குறைவு. ஒத்த கருத்துகளோடு இயங்குகிற, நமக்கு தொழில் பாதுகாப்பைக் கொடுக்கிற இடம்தான் சங்கம். வேறு எதுவும் இங்கு எதிர்பார்த்து வர வேண்டியதில்லை. எடிட்டர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யூனியன் பிரச்னைகளை எல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் நம் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது எல்லா சங்கங்களும் சிறப்பாக இருக்கின்றன. சினிமாவைச் சிறப்பாக்க சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும். தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்”.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “2026-2029 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பெப்சிக்கு படத்தொகுப்பாளர்கள் சங்கம் அதன் சக்தியைத் தாண்டி பங்காற்றி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகள். படத்தொகுப்பாளர் பணி மிகவும் சவாலானது. உடல் உழைப்பைவிட மனரீதியான உழைப்புதான் அங்கு அதிகம் தேவைப்படுகிறது. முன்பு பெப்சியை பார்த்து ஒரு பயம் இருக்கும். ஆனால், இப்போது மரியாதை வந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள்தான் நம் முதலாளி. அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாமும் செயல்பட முடியும். இதைத்தான் நான் அனைவரிடமும் சொல்வேன். சினிமாத்துறையைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இந்த எண்ணத்தை பெப்சியில் உள்ள அனைவருக்கும் எடுத்துச் சொல்லி புரிய வைத்தேன். சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரி போல சினிமாத்துறையை மாற்ற சில முயற்சிகள் எடுத்து வருகிறோம். டெக்னிக்கலாக சினிமா நிறைய மாறி வருகிறது. அதற்கேற்றாற்போல புதியவர்கள் வருகையும் பலம் சேர்க்கும். எடிட்டர்ஸ் யூனியன் முன்வைத்த சம்பளம், அக்ரிமெண்ட் கோரிக்கைகளை நிறைவேற்ற பெப்சி நிச்சயம் முயற்சிக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

