"அவங்களுக்காக என் படத்த தள்ளிவெச்சேன்; ஆனாலும்.." - சரத்குமார் கலகல | Thaai Kizhavi
ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `தாய் கிழவி'. இப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா, சூரி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட சரத்குமார் பேசியபோது, "இந்த `தாய் கிழவி' படம் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இதில் என்ன ஒரு பியூட்டி என்றால், என்னை வைத்து மாதவ் ராமதாசன் `ஆழி' என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படமும் 20ஆம் தேதி வருவதாக இருந்தது. ஆனால் அதே தேதியில், `தாய் கிழவி’ வருகிறது என்பதால், அதன் புரமோஷன் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கும். அதனுடன் நாம் மோதுவது தப்பு, எனவே நாம் 27க்கு போய்விடலாம் என தள்ளினோம். இப்போது விதியின் கோலம், அவரும் 27ஆம் தேதிக்கு வருகிறார். 1994 பிப்ரவரி 25 என்னுடைய அரண்மனை காவலன், கேப்டன் இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சூழல் உருவானது.
ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வருவது சரியாக இருக்காது எனக் கூறி ஏதாவது ஒரு படத்தைத் தள்ளி வைக்கலாம் என முயன்றேன். ஆனால் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் பிடிவாதமாக இருந்தனர். இரு படங்களும் வெளியாகி 100 நாட்கள் ஓடியது. அதற்காக 'ஆழி' 100 நாட்கள் ஓடும் எனச் சொல்லவில்லை. 'தாய் கிழவி' 100 நாட்கள் ஓட வேண்டும். என் மனைவி ஜெயித்தால் நான் ஜெயித்ததுபோல எடுத்துக் கொள்வேன்.
தாய் கிழவியில் பெண்களுக்கான முக்கியத்துவம்தான் பேசப்பட்டிருக்கிறது. God Motherதான் தாய் கிழவி. இந்த டைட்டில் ரோலை ராதிகா செய்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் இல்லை. அதற்கான உழைப்பு, உறுதி, தன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால்தான், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலையரசி ராதிகா இன்றும் மக்கள் மனதில் நிற்கிறார்" என்றார்.

