"Negativity வந்தால் நான் ப்ளாக் செய்துவிடுவேன்!" - Trolls பற்றி சமந்தா | Samantha
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. ஒருகட்டத்தில் அவரது உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் தீவிரமாக, சினிமாவில் நடிப்பதை மிகவும் குறைத்துக் கொண்டார். சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றில் நடித்து வந்தவர் கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்து கொண்டார். நேற்று சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #Ask me Anything மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது, ”சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்” என்ற கேள்வி வர, அதற்குப் பதிலளித்த சமந்தா, “பாராட்டோ, கிண்டலோ எதுவும் என்னை அசைத்துப் பார்க்காது. அதேசமயம், உங்களின் எதிர்மறை விஷயங்கள் எனது வீடுவரை வரும்பட்சத்தில் உங்களை நான் ப்ளாக் செய்துவிடுவேன். நான் ப்ளாக் செய்வதால் நீங்கள் என்னைக் காயப்படுத்திவிட்டீர்கள் என்று அர்த்தமில்லை. மாறாக, உங்களுக்கு இங்கு அனுமதியில்லை என்றே அர்த்தம்” என்றார்.
இன்னொரு ரசிகர், ”அதீத இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை எப்படி கைவிடுவது” எனக் கேட்க, "இது நானும் பயப்படும் ஒரு விஷயம். நான் சிறுமியாக இருந்தபோது, படிப்புக்கான கால அட்டவணை போட்டு, அதைப் பின்பற்றி எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் படிப்பேன் என்று ராஜிடம் (கணவர்) கூறுவேன். இப்போது அது என்னால் முடியுமா எனத் தெரியவில்லை. ரீல்ஸ் உருவாக்கும் FOMO Fear of Missing out (சுற்றி நடக்கும் நிகழ்வுகளைத் தவறவிட்டு விடுவோமோ என்கிற பயம்) காட்டுத்தனமானது. அதனால், நான் என் இன்ஸ்டாகிராமை லாக் செய்துகொள்கிறேன். பெரிய புத்தகங்கள், நீளமான podcasts என வேண்டுமென்றே சலிப்பு தரக்கூடியவற்றைத் தேர்ந்தெடுக்கிறேன். நாம் எல்லோரும் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள `மா இன்ட்டி பங்காரம்' படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிப்பில் முதல் படமாக வெளியாக இருக்கிறது இப்படம். இதனை கணவர் ராஜ் நிதிமோருவுடன் இணைந்து தன்னுடைய Tralala Moving Pictures மூலம் தயாரித்துள்ளார் சமந்தா.

