குஷி 2 படத்தில் விஜய் மகன்..? - எஸ்ஜே சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யங்கள்!
குஷி கதைக்கு விஜயின் ரியாக்ஷன், குஷி 2வில் விஜய் மகன்? - எஸ் ஜே சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யங்கள்
எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த `குஷி' வரும் செப்டம்பர் 25ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய எஸ்ஜே சூர்யா "இளைய தளபதியாக அவரைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்போது அப்படியான இடத்தை க்யூட்டான, அழகான நடிப்பை மிஸ் செய்கிறோம். படத்தின் கதையை சொல்லும் போதே நாம் படத்தை பார்த்துவிடுவோம். ஒவ்வொரு காட்சியையும் கதையாக்குதல், எழுதுதல், விவாதித்தல், படமாக்குதல், எடிட்டிங் என லட்சம் முறையாவது ஒவ்வொரு காட்சியையும் பார்ப்போம். எனவே படம் வெளியாவதற்கு முன்பு இந்தப் படம் நன்றாக இருக்கிறதா இல்லையா? என்ற மதிப்பீடே போய்விடும். அதன் பின்பு ரசிகர்கள் கொண்டாடும் போதுதான், நம் கணிப்பு சரியா என்றே தெரியும். எனவே ஒரு இயக்குநர் ஆடியன்ஸ் போல ரசிக்கவே முடியாது. ஆனால் முதல் முறை நான் இயக்கிய பட பாடலை ஒரு ஆடியன்ஸ் போல ரசித்து பார்த்தேன். இதிலிருந்து நான் எடுத்துக் கொள்வது என்ன என்றால், `கில்லர்' படத்தில் இந்த என்டர்டெய்ன்மென்ட் கொஞ்சமும் குறையக்கூடாது என்பதே.
இங்கு கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலை மூன்று முறை ஒன்ஸ்மோர் கேட்டார்கள். அது அவ்வளவு ஈர்க்க காரணம், இயல்பில் அதற்குள் இருக்கும் மெலடி தான். செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பழைய பாடலை ரெஃபரென்ஸ் ஆக சொல்லித்தான் தேவா சாரிடம் இந்தப் பாடலை வாங்கினேன். இந்தப் பட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த இருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா அவர்கள், மற்றும் படத்திற்கு தன் காமெடி மூலம் எனர்ஜி சேர்த்த விவேக் அவர்கள். இருவரையும் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
இப்படத்தின் கதையை நான் விஜய் சாரிடம் சொன்ன போது இரண்டரை மணிநேரம் கூறினேன். அவர் மிக அமைதியாக கேட்டார். எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை அவருக்குப் பிடிக்கவில்லையோ என நினைத்தேன். `விஜய் சார் உங்களுக்கு பிடிக்கலைன்னா வேற கதை சொல்லட்டுமா?' எனக் கேட்டேன், `ஏன் இது நல்லாதானே இருக்கு, இதையே பண்ணுவோம்' என்றார். அப்படி ஒரு பிரமாதமான அனுபவம்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த எஸ் ஜே சூர்யா,
குஷி படத்தின் பிரபலமான இடுப்பு காட்சி எப்படி உங்களுக்கு தோன்றியது?
"இதுவரை எத்தனையோ காதல் கதைகள் வந்தாலும், அவற்றில் பணம், குடும்ப பகை, மத பிரிவினை என வழக்கமான பிரச்சனைகள் இருக்கும். எனவே அப்படி வழக்கமான பிரச்சனைகள் எதுவும் இந்தக் காதலுக்கு சிக்கலாக இருக்க கூடாது என நினைத்தேன். எனவே வில்லனை வெளியே தேடாமல், அவர்களுக்குள்ளேயே வைத்தேன். ஆம் இடுப்பை பார்த்தேன் என சொல்லி இருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். ஆனால் அதை வைத்து புதுவிதமாக கொண்டு சென்றோம். Erich Segal என்ற ஆங்கில எழுத்தாளர் இருக்கிறார். Love Story, Man, Woman and Child போன்ற நாவல்கள் எழுதி இருக்கிறார். அவருடைய ரைட்டிங் ஸ்டைலைத்தான் நான் பின்பற்றினேன்.
குஷி 2 எடுத்தால் யாரை வைத்து எடுப்பீர்கள்?
"குஷி அமைந்ததே இறைவன் அமைத்துக் கொடுத்தது தான். அப்படி அமைந்தால் பார்க்கலாம். ஏனென்றால் நான் நடிப்பில் மிக ஆர்வமாக இருக்கிறேன்.
விஜய் மகன், ஜோதிகா மகள் இருக்கிறார்களே, அவர்களை வைத்து எடுக்கலாமே?
"நீங்களே காஸ்டிங் முடிவு செய்து கொடுத்துவிட்டீர்கள். wonders cannot be made they happen, if wonders has to happen it will happen"
அஜித், விஜய் கேரியரில் முக்கியமான படம் கொடுத்தீர்கள். இன்னும் பல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கலாம் என்ற ஏக்கம் இருக்கிறதா?
"எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் அஜித் சார், நான் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. எனக்கு வாய்ப்பு தந்தவருக்கு நான் நல்ல படம் கொடுத்தேன். என் வேலையை சரிவர செய்தேன். என்றைக்குமே நான் ஒரு ஸ்டார் ஹீரோவாக வேண்டும் என்றுதான் நினைத்தேன். நான் இயக்குநர் ஆனதே நடிகர் ஆகத்தான். எனவே இன்னும் நிறைய பேரை இயக்கியிருக்கலாம் என்ற ஏக்கம் எனக்கு இல்லை. என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல `கில்லர்' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.
`நியூ' படத்தை ரீ ரிலீஸ் செய்வீர்களா?
"நியூ பிரிண்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரசாத்தில் தான் அதற்கான பணிகள் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் அதை ரீ ரிலீஸ் செய்துவிடலாம்"
`கில்லர்' படம் எப்போது வரும்?
"அது இப்போதுதான் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 85 நாட்கள் ஷூட்டிங் வரும், முதல் ஷெட்யூல் 17 நாட்கள் தான் முடித்திருக்கிறேன். இப்போது என்னுடைய டேட் எனக்கு கிடைக்கவே கடினமாக இருக்கிறது. அது ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் காமெடி டிராமா படமாக தயாராகிறது"