`ஜனநாயகன்' மறு ஆய்வு நிறைவு... இனி முடிவு தேர்தல் ஆணையத்தின் கையிலா? | Jana Nayagan | Vijay
விஜயின் கடைசி படம் மறுதணிக்கை சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், தேர்தல் நெருங்குவதையொட்டி, இப்படத்தின் வெளியீடு குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என்று தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. விஜயின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த தணிக்கை வாரியம், சில மாற்றங்களைக் கூறியது. அதனை படக்குழு செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு. அதனை எதிர்த்து தணிக்கை வாரிய தரப்பும் நீதிமன்றத்தில் வாதிட்டது. கடைசியாக படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. அதன்படி, ரிவைசிங் கமிட்டி மார்ச் 9ம் தேதி படத்தைப் பார்ப்பதாக இருந்தது. ஆனால், மறு ஆய்வு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.
இதனால் தள்ளிப்போன மறு ஆய்வு மார்ச் 17ம் தேதி நடக்கும் என சொல்லப்பட்டது. அதன்படி நேற்று இப்படத்தின் மறு ஆய்வு மும்பையில் நடைபெற்றகாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் படத்தை மறு ஆய்வு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என மறு ஆய்வின்போது சரிபார்க்கப்பட்டுள்ளது. இப்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. `ஜனநாயகன்' படத்திலும் தேர்தல் சம்பந்தமான காட்சிகளும், அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் நடிகர் விஜயும் தீவிர அரசியலில் இயங்கி வருகிறார். எனவே இனி ஜனநாயகன் படம் குறித்த முடிவை தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் எனவும், ஜனநாயகன் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

