"`லியோ 2'வா.. முதலில் லியோ OST வரட்டும்!" - ரத்னகுமார் | Rathnakumar | Leo 2 | Vijay | LCU
இயக்குநர் ரத்னகுமார் சமீப பேட்டியில் ‘லியோ 2’ குறித்து பேசும்போது, தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்றும், முதலில் ‘கைதி 2’ முடிந்து, ‘லியோ’ OST வெளியான பிறகே அத்தகைய திட்டங்கள் பற்றி பேசலாம் என்றார். ‘லியோ 2’ ஃபிளாஷ்பேக், ‘விக்ரம்’ இரண்டாம் பாதிதானே இயக்கினார் என்ற வதந்திகள் தன்னைச் சிரிக்க வைக்கின்றன என்றும் கூறினார்.
’மேயாத மான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். தொடர்ந்து அமலா பால் நடித்த `ஆடை', சந்தானம் நடித்த `குலு குலு' போன்ற படங்களை இயக்கினார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த `மாஸ்டர்', `லியோ', கமல் நடித்த `விக்ரம்', ரஜினி நடித்த `கூலி' மற்றும் இன்னும் சில படங்களிலும் கதையில் பணியாற்றியுள்ளார். தற்போது விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள '29' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பேட்டிகளை அளித்து வருகிறார் ரத்னகுமார்.
சமீபத்திய அவர் அளித்த பேட்டியில் `லியோ 2' பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதில் சொன்ன ரத்னகுமார், "`லியோ 2'வுக்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. `கைதி 2' எல்லாம் முடிந்த பிறகுதான் `லியோ 2'. முதலில் லியோ OST வரட்டும் அப்புறம் `லியோ 2' பற்றிப் பேசலாம். சில சமயங்களில் `லியோ 2' ஃபிளாஷ்பேக் நான்தான் இயக்கினேன், ’விக்ரம்’ இரண்டாம் பாதியை நான் இயக்கினேன் என்றெல்லாம் வரக்கூடிய ரூமர்களைப் பார்க்கையில் சிரிப்பாக வரும்.
லோகேஷின் கதையை நான் இயக்குவதாக இருந்தது. அது நடக்காமல் போனதும் அவர் குழுவில் இருந்து என்னை நீக்கிவிட்டார் எனச் சொன்னார்கள். ஆனால், அதற்கெல்லாம் முன்பே இந்தப் படத்தை (29) தான் இயக்குகிறோம் என முடிவு செய்துவிட்டேன். இப்போது அந்த லோகேஷின் கதைதான் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் ஆக உருவாகிறது. எனவே, இதுபோன்ற வதந்திகளைத் தடுக்க முடியாது. Any Publicity is good publicity என நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்" என்றார்.

