ரஜினிகாந்த் - சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணைகிறதா? | Rajinikanth | Sundar C
ரஜினிகாந்த் - சுந்தர் சி கூட்டணியில் உருவான படம் `அருணாச்சலம்'. இப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது இக்கூட்டணி மீண்டும் இணைவதாக சொல்லப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் பணியாற்றி வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. படம் ஜூன் 12, 2026 வெளியாக உள்ளது. இப்படத்திற்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தில் ரஜினி இணைவார் என சொல்லப்பட்டது. சுந்தர் சி இப்போது நயன்தாரா நடிப்பில் `மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.
இந்த சூழலில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கு முன் ஒரு படத்தில் ரஜினி நடிக்க உள்ளார் எனவும், இப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஏசி சண்முகம், ஐசரி கணேஷ் உடன் இணைந்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் தயாரிக்க உள்ளார் என தகவல்.
ஒரு பக்கம் ரஜினி ஜெயிலர் 2வுக்கு பின், ரஜினி கமல் இணையும் படம், மீண்டும் ஒரு நெல்சன் படம் போன்ற படங்கள் அவரது பட்டியலில் இருக்கிறது. இன்னொரு பக்கம் சுந்தர் சி அடுத்து கார்த்தி படம், விஷால் படம் ஆகியவற்றை இயக்கம் முயற்சிகளில் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ரஜினி - சுந்தர் சி கூட்டணி அடுத்து இணைகிறது என இப்போது வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.