Sabesh
SabeshMusic Director

இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்! இதெல்லாம் இவர் இசையமைத்த படங்களா? | Sabesh | Deva

கே எஸ் ரவிக்குமார் இயக்கிய `பஞ்ச தந்திரம்', சிம்பு தேவன் இயக்கிய `இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', பார்த்திபனின் `வித்தகன்', பாரதிராஜாவின் `அன்னக்கொடி', முத்தையாவின் `கொடிவீரன்' என சமீபகால சினிமா வரை சபேஷ் - முரளியின் இசை இடம்பெற்றது.
Published on

இசையமைப்பாளர் சபேஷ் என்ற சபேசன் (68) உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்கள் சபேஷ் மற்றும் முரளி. பல இசையமைப்பாளர்களின் படங்களில் இசைக் கலைஞர்களாக பணியாற்றி தன் திரைப்பயணத்தை துவங்கிய சபேஷ், தன் சகோதரர் முரளி உடன் இணைந்து பல படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். இவர் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

தேவா இசையமைத்த பல படங்களில் இசை உதவி என்று சபேஷ் - முரளி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரஷாந்த், சிம்ரன் நடித்து உருவான படம் `ஜோடி'. இப்படத்திற்கு இசையமைத்தது ஏ ஆர் ரஹ்மான். இப்படத்தின் பின்னணி இசை சபேஷ் - முரளி. இந்தப் படத்தின் மூலம் பின்னணி இசையமைப்பாளர்களாக அறிமுகமான சபேஷ் - முரளி, தொடர்ந்து பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்து பிரபலமானார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கி சரத்குமார் நடித்த `சமுத்திரம்' படம் மூலம் பாடல் + பின்னணி இசை அமைத்து தங்கள் இசைப்பயணத்தை தனியாக துவங்கினார்கள். சேரன் இயக்கத்தில் உருவான `ஆட்டோகிராஃப்' படத்திற்கு இசை பரத்வாஜ். அப்படத்திற்கு பின்னணி இசையமைத்தது சபேஷ் - முரளி. இவர்களது திறமையை பார்த்த சேரன், தான் அடுத்து இயக்கிய `தவமாய் தவமிருந்து' படத்திற்கு இசையமைக்க வைத்தார். தொடர்ந்து `நைனா', `பாறை', `இம்சை அரசன் 23ம் புலிகேசி', `பொக்கிஷம்', `மாயாண்டி குடும்பத்தார்' எனப் பல படங்களில் தங்கள் தனித்துவமான இசையைக் கொடுத்தனர்.

Sabesh
Sabesh Imsai Arasan

இசையமைப்பாளராக பல படங்கள் பணியாற்றிய போதும், விரைவாக படங்களுக்கு பின்னணி இசை அமைத்துக் கொடுக்கும் சபேஷ் - முரளி கூட்டணியை தேடி பல படங்கள் வந்தன. கே எஸ் ரவிக்குமார் இயக்கிய `பஞ்ச தந்திரம்', சிம்பு தேவன் இயக்கிய `இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', பார்த்திபனின் `வித்தகன்', பாரதிராஜாவின் `அன்னக்கொடி', முத்தையாவின் `கொடிவீரன்' என சமீபகால சினிமா வரை சபேஷ் - முரளியின் இசை இடம்பெற்றது.

இசையில் சகோதரர் முரளியுடன் இணைந்து கூட்டணியாக வென்ற சபேஷ், பாடல் என்றால் சோலோவாக இறங்கி கலக்குவார். தேவா இசையில் உருவான `கண்ணெதிரே தோன்றினாள்' படத்தில் `கொத்தாள் சாவடி லேடி', `ஆனந்த பூங்காற்றே' படத்தில் `உதயம் தியேட்டருல', `காதலே நிம்மதி' படத்தில் `கந்தன் இருக்கும் இடம்', `நினைவிருக்கும் வரை' படத்தில் `காத்தடிக்கிது' என பல ஹிட் கானாக்களை பாடியது தேவா எனக் கடந்திருக்கக் கூடும். ஆனால் இவற்றில் சபேஷின் குரலும் கலந்திருக்கிறது. அவரின் துள்ளலான அந்தக் குரல் பலரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும்.

இப்படி இசை மற்றும் பாடல்கள் என ரசிகர்களைக் கவர்ந்த சபேஷ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் காலமானார். சபேஷுக்கு கீதா மற்றும் அர்ச்சனா என்ற மகள்களும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். சபேஷின் மனைவி தாரா முன்னரே காலமானது குறிப்பிடத்தக்கது. சபேஷின் இறுதி சடங்குகள் நாளை மாலை அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது. இவரது மறைவுக்கு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com