”நிறைய பேருடைய கடின உழைப்பு வீணாகி இருக்கக்கூடாது!” - மமிதா பைஜூ | Mamitha Baiju | Jana Nayagan
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். CBFC சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கும் இப்படம், எதிர்பாராத விதமாக ஏப்ரல் 9ஆம் தேதி மாலை இணையத்தில் வெளியானது. இது சம்பந்தப்பட்ட நபர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.
இப்படம் இணையத்தில் வெளியானது குறித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட திரைத்துறையினர் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இப்படக்குழுவினரான பூஜா ஹெக்டே, மமிதா ஆகியோரும் பதிவுகளை வெளியிட்டனர். தற்போது `கர' படத்துக்காக புரமோஷன் பேட்டி அளித்து வரும் மமிதா பைஜூவிடம் `ஜனநாயகன்' கசிவு குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன மமிதா பைஜூ, "அது மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்று. மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது. அது நிறைய பேருடைய கனவு, கடின உழைப்பு. அவை எல்லாம் வீணாகி இருக்கக் கூடாது.
இந்த செய்தி முதலில் சமூக வலைத்தளங்களில் வரும்போது நான் நம்பவே இல்லை. முதலில் என்னுடைய சகோதரர்தான் இந்த விஷயத்தை கூறினார். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என நினைத்தேன். இது மிகவும் துரதிர்ஷடமானது." என்று கூறியுள்ளார்.

