‘மாமன்னன்’ படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

உதயநிதி நடிப்பில் நாளை வெளியாக உள்ள ‘மாமன்னன்’ படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
மாமன்னன்
மாமன்னன்ட்விட்டர்

ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் கடந்த 19 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், “உதயநிதியை நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது. 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது.

ஏஞ்சல்
ஏஞ்சல்

இந்த சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே ‘தனது கடைசி படம்’ என கூறியுள்ளார். ‘ஏஞ்சல்’ படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்’ படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ‘ஏஞ்சல் ’படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஏற்கனவே 42 நாட்கள் பிஜி தீவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது எனவும், இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே பாக்கி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. ‘மாமன்னன்’ தனது கடைசி படம் என உதயநிதி அறிவித்து உள்ளதால் தான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. ‘மாமன்னன்’ படம் தனது கடைசி படம் அல்ல; இன்னும் இரு படங்கள் நிலுவையில் உள்ளதாக உதயநிதி கூறினால் பிரச்னையே இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கதையை மாற்றி படத்தை வெளியிட வேண்டுமானால் கதாநாயகரின் ஒப்புதல் வேண்டும் எனவும், ஒப்புதல் தெரிவித்து உதயநிதி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரெட்ஜெயிண்ட் மூவீஸ் மற்றும் உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டதாவது, “மீதமுள்ள படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் எனக் கோரினாலும், தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு 25 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது.

‘மாமன்னன்’ படத்தை ரெட்ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளது. ‘ஏஞ்சல்’ படத்தில் நடித்து முடித்தாகிவிட்டது” என்று உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தயாரித்துள்ள ‘மாமன்னன்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததுடன், ‘ஏஞ்சல்’ படத்தில் மீதமுள்ள பகுதியை நடித்துக் கொடுப்பது தொடர்பான கோரிக்கை மீது பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com