90களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் தான் `கர' - விக்னேஷ் ராஜா சொன்ன தகவல் | Kara | Dhanush
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் `கர'. `போர் தொழில்' படம் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் விக்னேஷ் ராஜா. அதில் படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் இப்படத்தின் கதை எப்படி அமைந்தது எனக் கேட்கப்பட "இப்படத்தின் கதை இரு வெவ்வேறு செய்திகளை படித்த போது வந்தது. முதல் செய்தியை படித்த போது நகைச்சுவையாக தான் இருந்தது. ஆனால் சில மாதங்கள் கழித்து இரண்டாம் செய்தியை படித்த போது, எனது பார்வை மாறியது. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்தால் எப்படி இருக்கும் என்ற புள்ளியில் துவங்கியதே இக்கதை. இது நிஜச்சம்பவங்களை மையமாக கொண்டதல்ல, ஆனால் சில விஷயங்கள் மட்டும் நிஜம்" என்றார்.
இது தனுஷுக்கு என பிரத்யேகமாக எழுதப்பட்டதா என்றதும் "போர் தொழில் படத்துக்கு பின் தனுஷ் சார் என்னை அழைத்து என்னுடன் பணியாற்ற ஆர்வம் உள்ளதாக சொன்னார். அப்போது என்னிடம் மேலோட்டமான ஐடியா மட்டுமே இருந்தது. முழுக்கதையும் தயார் செய்த பின்பே அவரிடம் கூற விரும்பினேன். அந்த உருவாக்கத்தின் போதே, இதில் தனுஷ் சார் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என தோன்றியது. ஏனென்றால் இந்த பாத்திரத்துக்குள் நிறைய விஷயங்கள் நடக்கும். அதனை சரியாக வெளிப்படுத்தவும், அதே சமயம் மற்றவர்கள் வெறுத்துவிடாமல் இருக்கவும் வேண்டும். எனவே பார்வையாளர்களுக்கு தெளிவை கொடுப்பது எப்படி என்பதில் நிறைய உரையாடல்கள் மேற்கொண்டோம். தனுஷ் சாருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். `இட்லி கடை' மற்றும் `கர' இரண்டின் படப்பிடிப்பும் ராமநாதபுரத்தில் தான் நடைபெற்றது. அவர் அந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு இங்கு வருவார். அவரது கேரவனில் படத்தின் எடிட்டிங் நடக்கும். இதனிடையில் `தேரே இஷக் மே' பட டப்பிங்கும் செய்வார். மேலும் இரண்டு படங்களின் வெளியீட்டு வேலைகள், அதன் புரமோஷனும் நடைபெற்றது. காலையில் மும்பை செல்வார், அன்று இரவே கிளம்பி படப்பிடிப்பு வருவார். படத்தை விரைவாக முடிக்க மிகக் கடினமாக உழைத்தார் தனுஷ் சார்" " என்றார்.
படத்தின் டீசர் மிக அழுத்தமான படமாக இருக்கும் என்ற உணர்வை கொடுக்கிறதே எனக் கேட்கவும் "இது உணர்வுப்பூர்வமான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். 90 காலகட்டங்களில் ராமநாதபுரத்தில் நடக்கும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கதையின் நாயகன் கரசாமி, படத்தில் அவரது பாத்திரம் க்ரே தன்மை உள்ளதாக இருக்கும். எனவே அதை மையப்படுத்தி `கர' எனப் படத்திற்கு பெயரிட்டோம். குற்றவுணர்ச்சி, மீட்பு, அழுக்கு, கரை எனப் பலவும் இதன் அர்த்தம் எனக் கொள்ளலாம். ஆனால் இப்படத்தின் முடிவில் அதன் அர்த்தம் என்ன எனத் தெளிவாக புரியும். எது அறம் என்பதை சுற்றி தான் படத்தில் உள்ள பல பாத்திரங்கள் இருக்கும்" என்றார்.

