"இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்ததில்லை" - ப்ரியங்கா மோகன் உற்சாகம் | Priyanka Mohan
ப்ரியங்கா மோகன் நடிப்பில் ரா கார்த்திக் இயக்கி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான படம் `மேட் இன் கொரியா'. தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்தார். அவருக்கு ஏப்ரல் 20-ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக 'மேட் இன் கொரியா' படத்தில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார். கொரியாவில் சென்று படமாக்கப்பட்ட முதல் இந்தியப்படம் 'மேட் இன் கொரியா'தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டது பற்றி கூறிய ப்ரியங்கா மோகன், "அது முற்றிலும் எதிர்பாராதது. குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிருந்து எப்படி இருக்கும் என்று நான் எப்போதுமே யோசித்ததுண்டு. பல முக்கியப் பிரமுகர்களுடன் அமர்ந்து உணவு அருந்துவது ஒரு கனவுபோல இருந்தது. தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டபோது `நான் உங்களது படத்தைப் பார்த்தேன்' என்று கூறினார். அவரது மனைவி கிம் ஹீ கியுங் (Kim Hea Kyung) கூட என்னைப் பாராட்டினார். இந்த தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்.
நான் 'மேட் இன் கொரியா' படத்தில் நடித்தபோது, எனது சிறந்த பங்களிப்பை வழங்குவது எனது பொறுப்பு என்பதால், எனது கடமையைச் செய்தேன். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு என்பார்கள், ஆனால் என் விஷயத்தில் அது உண்மையாகவே பலனளித்தது. மக்கள் இப்படத்தை இவ்வளவு விரும்புவார்கள் என்றோ, இது எல்லைகளைக் கடந்து சென்றடையும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. நான் ராஷ்டிரபதி பவனில் இருப்பேன் என்றோ, மற்றொரு நாட்டின் அதிபர் என் படத்தைப் பார்ப்பார் என்றோ என் கனவிலும் நினைத்ததில்லை.
அது ஒரு நம்பமுடியாத தருணமாகவும், ஓர் அற்புதமான மாலையாகவும் இருந்தது. நான் அங்கே கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் இருந்தேன், அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் பொக்கிஷமாகப் போற்றுகிறேன். எல்லாவற்றையும் நேரில் கண்டது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது, அது எப்போதும் என் இதயத்தில் நிலைத்திருக்கும்" என்றார்.

