"மாரி செல்வராஜ் சாதிய படம் எடுக்கிறாரா?" - சரத்குமார் சொன்ன விளக்கம் | Sarathkumar | Mari Selvaraj
சரத்குமார், மாரி செல்வராஜ் படங்கள் சாதிய மையப்படுத்தப்பட்டவை என்கிற விமர்சனத்தை எதிர்த்து, அவை சமூக வலிகளை வெளிப்படுத்துகின்றன என்று கூறினார். ஹாலிவுட் படங்கள் போல, மாரி செல்வராஜ் படங்கள் சமூகத்தின் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன என்று அவர் வாதிட்டார்.
நடிகர் சரத்குமார் சமீபத்தில் நடந்த உரையாடல் நிகழ்வில் மாரி செல்வராஜ் படங்கள் பற்றி தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதில் மாரி செல்வராஜ் படங்கள் சாதிய படங்கள் என்று சொல்லப்படுவதை எதிர்த்து தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.
"மாரி செல்வராஜ், ரஞ்சித் படங்கள் பற்றி பேசும் போது பலரும் சொல்வது அவர்கள் சாதியை மையப்படுத்திய படங்கள் எடுக்கிறார்கள் என்பார்கள். ஹாலிவுட் என்ன செய்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். யூதர்கள் என்ன கொடுமைகளை செய்தார்கள், கறுப்பின மக்கள் என்ன கொடுமைகளை எதிர்கொண்டார்கள் என்ற வலியை காண்பிக்கிறார்கள். இந்த வலியை உணர்ந்தவர்கள் நினைவுகளில் இருந்து இந்த சம்பவங்களை அழிக்க முடியாது. ஏன் இதை காண்பிக்கிறீர்கள் என நாம் கேட்பது அபத்தமானது. அது அவர்களின் வலி, அதை சொல்கிறார்கள். அவர்கள் அனுபவித்த வலி, அவர்களின் முன்னோர்கள் அனுபவித்த வலி, அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
அடிமைப்பட்டு இருந்த அவர்களின் வலி இன்னும் அவர்களின் நினைவுகளில் இருந்து அகலவில்லை. எனவே படங்களை படமாக பார்க்க வேண்டும். மாரி செல்வராஜ் அற்புதமான படங்களை கொடுக்கிறார். `பைசன்', `வாழை', `பரியேறும் பெருமாள்' என அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த இயக்குநர். பைசனில் சாதி ரீதியான சில சர்ச்சைக்குரிய பகுதிகள் இருக்கிறது என சொன்னார்கள். நிஜத்தில் வாழ்ந்த இரு பாத்திரங்களை எடுத்து கதை செய்திருக்கிறார். ஆனால் அவர்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் தந்து சமன் செய்திருந்தார். பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பு தருகிறார்" எனப் பேசினார் சரத்குமார்.

